3 சிக்கன் பிரியாணி, 2 காடை வறுவல், அப்றம் ஆம்லேட்.. ஓடும் ரயிலில் நீங்க ஆர்டர் செய்யலாமே!
டெல்லி: ரயிலில் பயணம் செய்யும் போதே பயணிகள் தங்களுக்கு பிடித்தமான ஹோட்டல்களில் இருந்து விருப்பமான உணவை ஆர்டர் செய்து பெறும் இ-கேட்டரிங் முறையை சுற்றுலாத் துறையுடன் சேர்ந்து ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில் பயணங்களின் போது பெரும்பாலும் புளித்துப் போன இட்லியும், காய்ந்து போன சப்பாத்தியும் தான் பெரும்பாலான பயணிகளுக்கு சாப்பிடக் கிடைக்கும். அதிலும் குறிப்பிட்ட ஊர்களில் சில ருசியான சாப்பாடுகள் கிடைக்கும் என்றாலும், பயணிகளால் இறங்கிப் போய் வாங்கி வர இயலாது.
எனவே, இத்தகைய பயணிகளின் நாவிற்கு விருந்து படைக்கும் வகையில் புதிய திட்டத்தை அமல் படுத்தியுள்ளது ஐஆர்சிடிசி.
சுடச்சுட உணவுகள்...
இதன்படி, இனி ரயிலில் பயணம் செய்யும் போதே நமக்கு தேவையான உணவை விருப்பமான ஹோட்டல்களில் ஆர்டர் செய்ய முடியும். அவை அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நமக்கு அளிக்கப்படும்.
முதல்கட்டமாக...
இந்தத் திட்டமானது முதல்கட்டமாக 45 குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் அமல் படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் சென்னை செண்ட்ரல், சென்னை எக்மோர், லக்னோ, வாரணாசி, டெல்லி, பெங்களூரு, மதுரை, திருவனந்தபுரம் செண்ட்ரல், திருப்பதி, எர்ணாகுளம், புனே போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஆர்டர் செய்யும் முறை...
இதற்குப் பயணிகள், www.ecatering.irctc.co.in என்ற ஆன்லைன் முகவரியில் சென்று தங்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்ய வேண்டும். இதேபோல், 0120-2383892-99/ 1800-1034-139 (டோல் ப்ரீ ) எண்ணில் அழைத்தும் உணவை ஆர்டர் செய்யலாம். 139 என்ற எண்ணிற்கும் இது தொடர்பாக எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
கட்டணம்...
இவ்வாறு உணவு ஆர்டர் செய்யும் பயணிகள் தங்களது பிஎன்.ஆர். எண், இருக்கை எண் உள்ளிட்ட விபரங்களைக் கொடுக்க வேண்டும். உணவிற்கான பணத்தை ஆன்லைனிலோ அல்லது உணவைப் பெற்றுக் கொண்ட பின் நேரிலோ கொடுத்தால் போதுமானது.
சுற்றுலாத்துறையுடன் சேர்ந்து...
சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஐஆர்சிடிசி இந்தத் திட்டத்தை அமல் படுத்தியுள்ளது. இதற்காக கே.எப்.சி. ஒன்லி அலிபாபா, பீட்சா ஹட் உள்ளிட்ட பல உணவகங்களுடன் ஐஆர்சிடிசி கைகோர்த்துள்ளது.
கேன்சல் செய்யும் வசதி...
இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்யும் வசதியும் இதில் உள்ளது. ஆனால், உணவு டெலிவரி செய்யப்படவுள்ள ரயில் நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட ரயில் சென்றடைவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக கேன்சல் செய்ய வேண்டும்.
சோதனை முறையில்...
அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை இந்தத் திட்டத்தை சோதனை செய்து பார்க்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. பயணிகளின ஆதரவைப் பொறுத்து பின்னர் இது நிரந்தரமாக்கப்படும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.