ஊழல் + மோதல் + தேர்தல்.. எகிறும் மபி முதலமைச்சரின் பிபி! பாஜக தலைமை அப்செட் - பறிக்கப்படுமா பதவி?
போபால்: மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹானுக்கு எதிராக ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருக்கும் சூழலில் அவருக்கு எதிரான ஊழல் வழக்கு விவாதப் பொருளாக உருவெடுத்துள்ள நிலையில் முதலமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் நூலிழையில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. அதில் முதலமைச்சராக ஜோதிர் ஆதித்ய சிந்தியா அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவரான கமல்நாத் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். அன்றிலிருந்து தொடங்கிய உட்கட்சிப்பிரச்சனை கடந்த 2020 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில்போ முடிந்தது. பாஜகவின் ஆபரேசன் தாமரையால் கவிழ்ந்தது மபி காங்கிரஸ் ஆட்சி.
பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் பாரபட்சம் இன்றி ஏழைகளை சென்றடைகிறது: அமைச்சர் ஜிதேந்திர சிங்!
ஆபரேசன் தாமரை
கடந்த 2020 மார்ச் மாதம் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் பதவி விலகியதால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்தது. இதனை தொடர்ந்து சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைத்தது.
பாஜக அரசில் புகைச்சல்
ஜோதிர் ஆதித்யாவும் பாஜகவில் சேர்ந்து மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரோடு கட்சியிலிருந்து விலகிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற புகைச்சல் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த புகைச்சல் அதிகமாகி மத்திய பிரதேச பாஜக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவராஜ் சிங் சவுஹான்
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் பாஜகவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையான அனுபவம் கொண்டவர். 3 முறை தொடர் வெற்றியை பெற்றவர். மோடியை போன்றே ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர். 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சிவராஜ் சிங்கையும் பாஜகவினர் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், வியாபம் ஊழல், 2018 தேர்தல் தோல்விக்கு பிறகு அவரது நிலை மாறத் தொடங்கியது.
மோதல், ஊழல்
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான சிவராஜ் சிங் சவுகானுக்கு உட்கட்சியிலிருந்தே எதிர்ப்புகள் வலுத்தன. கடந்த ஆகஸ்டு மாதம் பாஜகவின் உட்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பான நாடாளுமன்ற வாரியத்திலிருந்து நீக்கப்பட்டார் சிவராஜ் சிங் சவுகான். 18 ஆண்டுகள் அவர் வகித்த பதவி பறிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது பெண்களுக்கு இலவச ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதில் சிவராஜ் சிங் சவுகானுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
4 பேர் போர்க்கொடி
ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் ஆதரவாளரான 2 அமைச்சர்கள் உட்பட 4 எம்.எல்.ஏக்கள் பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஊராட்சி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மகேந்திர சிசோடியா, அமைச்சர் பிரிஜேந்திர சிங் யாதவ், பாஜக மூத்த தலைவர் சீதாசரண் சர்மா, எம்.எல்.ஏ. நாராயண் திரிபாதி ஆகியோர் ஆளும் மத்திய பிரதேச பாஜக அரசுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.
முதலமைச்சர் பதவி
பாஜக தலைமையும் சிவராஜ் சிங் சவுகான் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மத்திய பிரதேச சிவராஜ் சிங் சவுகானுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாலும், பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதாலும் தேர்தல் வரை பொறுமை காக்க மூத்த தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளார்களாம்.