ஜம்மு காஷ்மீரில் 300 தீவிரவாதிகள் பதுங்கல்... தொடரும் ஊடுருவல்!
ஜம்மு-காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், எல்லை வழியாக அவர்கள் தொடர்ந்து ஊடுருவி வருவதாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்த தகவலால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில் காவல்துறை மற்றும் ஆட்சிப்பணி உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகளிடம் மேகபூபா கேட்டறிந்தார்.
இதில் பங்கேற்ற அம்மாநில டிஜிபி ராஜேந்திரா, ஜம்மு காஷ்மீரில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், எல்லை வழியாக அவர்கள் தொடர்ந்து ஊடுருவி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தீவிரவாதிகளின இந்த ஊடுருவலால் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் சின்னாபின்னமாகி சிதறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜ்ஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது.
இதனால் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 4 மாதங்கள் கடந்துள்ள போதும் இன்னும் பல இடங்கள் பதற்றமாக காணப்படுவதகவும் ராஜேந்திரா கூறினார்.
பதற்றமான பகுதிகளில் இதுவரை 73 கட்டடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றில் 53 கட்டடங்கள் முற்றிலும் தீக்கிரையாகியிருப்பதாவும் டிஜிபி ராஜேந்திரா தெரிவித்தார்.
ஏற்கனவே எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் தற்போது ஐம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் கூறியிருக்கும் தகவல் அங்கு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.