இந்தியா-பாக். பேச்சை சீர்குலைக்க நடத்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் இரட்டை தாக்குதல்!
டெல்லி: அமெரிக்காவில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையிலேயே இரட்டை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.. மேலும் நியூயார்க் பேச்சுவார்த்தையை நடத்தக் கூடாது என்றும் பல கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு இரு நாட்டு பிரதமர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இப்பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.
பிரதமர் நம்பிக்கை
ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்தித்துப் பேச உள்ளதாகவும், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்தும் வகையில் அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
திடீர் இரட்டை தாக்குதல்- 12 பேர் பலி
இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் திடீரென ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 8 மணிக்கு ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹிரா நகர் போலீஸ் நிலையம் மீது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இதேபோல் மற்றொரு தீவிரவாதிகள் குழு ராணுவ முகாம் ஒன்றையும் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல்களில் லெப். கேணல் உட்பட 12 பேர் பலியாகி உள்ளனர்.
நடத்தியது ஐ.எஸ்.ஐ?
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுவதை விரும்பாத பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐதான் தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பேச்சை சீர்குலைக்க சதி- காங்.
தீவிரவாதிகளின் திடீர் இரட்டை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மீம் அஃப்சல், நியூயார்க் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றார்.
பேச்சு கூடாது -பாஜக
இந்திய வீரர்கள் 5 பேரை ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் படையினர் படுகொலை செய்தது முதலே பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறது பாஜக. தற்போது ஜம்மு காஷ்மீரில் இரட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் எந்த ஒரு அர்த்தமும் கிடையாது. அதனால் பேச்சுவார்த்தையை நடத்தக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
ஒமர் கண்டனம்
இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க நடத்தப்பட்ட இத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கண்டனம்
ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் நரேஷ் அகர்வால், மத்திய அரசு பலவீனமாக இருக்கிறது. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும் என்றார்.
பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டுங்க..
ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தியாகியோ, நவாஸ் ஷெரீப்புடனான பேச்சுவார்த்தையின் போது இத்தகைய தீவிரவாத தாக்குதல்களை பிரதமர் மன்மோகன்சிங் சுட்டிக்காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.