ஜெ.வை சந்திக்க ஜெகன்மோகன் ரெட்டிக்கு சிபிஐ கோர்ட் அனுமதி
ஆந்திராவை இரண்டாக பிரிந்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒருங்கிணைந்த ஆந்திராவாக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் சிறையில் இருந்து விடுதலையானதும் ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தார்.அடுத்த கட்டமாக எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த தேசிய தலைவர்களின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்த பின்பு, கம்யூனிஸ்டு தலைவர்களை சந்தித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத் பவார் ஆகியோரை சந்தித்து ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு திரட்டினார்.
அடுத்து அவர் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடிவு செய்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி நிபந்தனை ஜாமீனில் இருப்பதால் அவர் நீதிமன்ற அனுமதியுடன்தான் ஹைதராபாத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டும். அதன்படி அவர் டெல்லி, மேற்கு வங்காளம், மும்பைக்கு நீதிமன்ற அனுமதியுடன் சென்றார்.
அடுத்து அவர் சென்னை செல்ல கோர்ட்டு அனுமதி கேட்டார். இது தொடர்பாக அவரது வக்கீல் ஐதராபாத் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி சென்னை செல்வதற்காக 4 நாட்கள் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அதை ஏற்ற நீதிமன்றம் ஜெகன்மோகன் ரெட்டி இன்று முதல் வருகிற 29-ந் தேதி வரை சென்னை செல்ல அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கிய 4 நாட்களில் ஏதாவது ஒரு தேதியில் அவர் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கேட்பார் என்று தெரிகிறது.