பகல் முழுவதும் சசிகலாவும், இளவரசியும் ஜெயலலிதாவின் அறையில்தான் இருக்கிறார்கள்!
பெங்களூர்: தமிழகத்தில் இருந்ததைவிட சிறைச்சாலையில் நன்றாகத்தான் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறைத்துறை டி.ஐ.டியிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையின் டி.ஐ.ஜி ஜெயசிம்ஹா ஒன்இந்தியா தமிழ் வெப்சைட்டுக்கு கடந்த, மூன்றாம் தேதி அளித்த சிறப்பு பேட்டியில், சிறையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்கவில்லை என்றும், அவர் இதுவரை யாரையும் சந்திக்கவில்லை என்றும், ஜெயலலிதா ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது, விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் ஜெயசிம்ஹா கூறியிருப்பதாவது:
ஆரோக்கியமாக உள்ளார்
ஜெயலலிதா மிகவும் நன்றாக இருக்கிறார். சுகர், பிரஷர் சீராக இருக்கிறது. 28ம் தேதி மட்டும் அவருடைய பர்ஷனல் டாக்டர் அவரை பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டது. வெளியில் இருந்து மருந்துகள் எடுத்துவர அனுமதி கொடுத்தோம். அதன் பிறகு சிறை வளாகத்தில் உள்ள டாக்டர்கள்தான் அவரைக் கண்காணித்து வருகிறார்கள்.
தினசரி வாக்கிங்
அதிகாலையில் எழுந்துவிடுகிறார். காலை 6 மணிக்கு அவர் அடைக்கப்பட்டிருக்கும் அறை திறக்கப்படும். மாலை 6 மணிக்கு அந்த அறையை அடைத்துவிடுவோம். அவரது அறை திறக்கப்பட்டதும் அவர் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனாலும் அதிக தூரம் நடப்பதில்லை.
சிறை உணவுகள்
பெரும்பாலும் பிரட், சான்ட்விச், பால், பழம் இவைகளைத்தான் சாப்பிடுகிறார். முதலில் வெளியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு வெளியில் இருந்து உணவு வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறை உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.
தினம் ஒரு டிபன்
பரப்பன அக்ரஹாரா சிறையில் விதவிதமான காலை உணவுகளை கர்நாடக அரசு வழங்கி வருகிறது. திங்கள்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை இடிச்ச அவல் சாதம், புதன்கிழமை எலுமிச்சை சாதம், வியாழக்கிழமை வெஜிடபிள் புலாவ், வெள்ளிக்கிழமை உப்புமா, சனிக்கிழமை இடிச்ச அவல் சாதம், ஞாயிற்றுக்கிழமை புளியோதரை ஆகியவை வழங்குகிறோம். வழக்கமாக நாங்கள் கைதிகளுக்கு இந்த வரிசைப்படிதான் காலை உணவு கொடுப்போம். அதையேதான் ஜெயலலிதாவும் சாப்பிடுகிறார்.
சலுகை செய்துதரவில்லை
ஜெயிலுக்குள் ஜெயலலிதாவுக்கு சிறப்பு வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. வி.வி.ஐ.பி கைதிகளுக்கு என்ன வசதிகள் கொடுக்கப்படுமோ அவை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. சிறைக் கைதிகளுக்கு கொடுக்கப்படும் யூனிஃபார்ம் மட்டும் அவருக்குக் கொடுக்கவில்லை. அவருடைய வீட்டில் இருந்து எடுத்துவந்த உடைகளை அணிய அனுமதி கொடுத்திருக்கிறோம். காலை 8 மணிக்குப் பிறகு இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளும் மூன்று ஆங்கில பத்திரிகைகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர் முழுமையாக வாசிக்கிறார்.
யாரையும் பார்க்கவில்லை
ஜெயலலிதா உள்ளே வந்ததில் இருந்து இதுவரை பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கவே இல்லை. ஜெயலலிதாவைச் சந்திக்க விரும்பி மனு போடும் அனைவரின் பட்டியலையும் அவரிடம் தினமும் கொடுக்கிறோம். வாங்கிப் படித்துப் பார்க்கிறார். 'யாரையும் மீட் பண்ண விரும்பவில்லை!' என்று சொல்லி விடுகிறார்.
சசிகலா, இளவரசியுடன் பகல் பொழுது
சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் ஜெயலலிதா இருக்கும் பகுதிக்கே மாற்றிவிட்டோம். பகல் முழுவதும் சசிகலாவும், இளவரசியும் ஜெயலலிதாவின் அறையில்தான் இருக்கிறார்கள். மூவரும் நன்றாகப் பேசியபடி இருக்கிறார்கள். மாலை ஆறு மணி ஆனதும் மூவரையும் தனித்தனி அறையில் அடைத்துவிடுகிறோம். சசிகலாவும், இளவரசியும் மட்டும் அவர்களது வழக்கறிஞர்களைச் சந்தித்துப் பேசினார்கள். சுதாகரன் ஆண்கள் சிறையில் இருப்பதால், இவர்களோடு அவர் பேசவோ, சந்திக்கவோ வாய்ப்பு இல்லை. சுதாகரனைப் பார்க்கவும் நிறையப் பேர் வருகிறார்கள். அவர்களை அவர் சந்திக்கிறார்.
இங்கதான் நல்லா இருக்கேன்
நான் தினமும் ரவுண்ட்ஸ் செல்வேன். அப்போது அவரிடம் ஏதாவது ஜெயிலில் குறைகள் இருக்கிறதா... எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரித்தேன். 'தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை. என் உடல் ஆரோக்யமாக இருக்கிறது' என்று சொன்னார். இவ்வாறு அந்த பேட்டியில் ஜெயசிம்ஹா கூறியுள்ளார்.