உ.பி தேர்தல் ... சிறையில் இருந்த படியே வென்ற கொலை குற்றவாளி
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை கொன்ற வழக்கில் கைதானவர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மனைவியை கொன்ற வழக்கில் கைதானவர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று, நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. உ.பி.யில் 324 தொகுதிகளில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றது.
காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சி கூட்டணி 54 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களில் வென்றது.
இந்நிலையில் சுயேட்சை வேட்பாளராக நவுடன்வா தொகுதிகளில் அமன்மணி திரிபாதி என்பவர் போட்டியிட்டு 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தம்மை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் குன்வர் கவுசல் கிஷோர் சிங்கை தோற்கடித்துள்ளார்.
அமன்மணி திரிபாதிக்கு முதலில் சமாஜ்வாதி கட்சியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் அகிலேஷ் யாதவ் அமன்மணி திரிபாதிக்கு கொடுத்த வாய்ப்பை பறித்துவிட்டார்.
இதனிடையே மனைவியை கொன்று நாடகமாடிய வழக்கில் அமன்மணி சிக்கினார். அவர் சிறையில் இருந்தபடியே தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
தற்போது பிரசாரம் செய்யாமலேயே அமன்மணி வென்றிருப்பதும் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறிப்பாக அகிலேஷ் யாதவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.