டெல்லி முதல்வர்- ஆளுநர் இடையே உச்சகட்ட மோதல்! ஆம் ஆத்மி அரசை சாடுகிறார் ஜேட்லி!!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆளுநர் நஜீப்ஜங் ஆகியோரிடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஆம் ஆத்மி அரசை மிகவும் கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லி மாநில தலைமைச் செயலாளர் கே.கே.சர்மா தனிப்பட்ட பயணமாக விடுமுறையில் அமெரிக்கா சென்றார். இதனால் தற்காலிக தலைமைச் செயலாளராக மாநில மின்துறை செயலாளராக இருக்கும் சகுந்தலா கேம்லினை ஆளுநர் நியமனம் செய்தார்.
இந்த நியமனம் தொடர்பாக தன்னை ஆளுநர் கலந்து ஆலோசிக்கவில்லை என்று முதல்வர் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார். தலைமை செயலாளர் பொறுப்பை கேம்லின் ஏற்க கூடாது என்று அவருக்கு கடிதம் அனுப்பினார்.
அதை ஏற்க மறுத்த கேம்லின் ஆளுநர் உத்தரவுப்படி பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் சகுந்தலா கேம்லினை தலைமைச் செயலாளராக நியமிக்கும் கடிதம் அனுப்பிய டெல்லி மாநில சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் அனிந்தோ மஜும்தாரை கேஜ்ரிவால் இடமாற்றம் செய்தார்.
அவருக்கு பதில் ராஜேந்திரகுமார் என்பவரை நியமித்தார். இந்த இடமாற்றலும், நியமனமும் செல்லாது என்று ஆளுநர் அறிவித்தார்.
இதனால் டெல்லியில் முதல்வர் மற்றும் ஆளுநர் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, ஆம் ஆத்மி அரசு டெல்லியை ஆட்சி செய்யவிரும்பவில்லை என்றே தெரிகிறது.. மக்கள் விரும்புவது ஆட்சி நிர்வாகத்தைத்தானே தவிர சர்ச்சைகளை அல்ல.. டெல்லியில் அதிகவிலை கொடுத்து பரிசோதனை நடத்துகிறது ஆம் ஆத்மி என்று சாடியுள்ளார்.