பட்ஜெட்டில் சந்தேகமா? ட்விட்டரில் அருண் ஜெட்லியிடம் கேளுங்கள் #ASKYourFM
பொதுமக்களின் பட்ஜெட் 2018 தொடர்பான சந்தேகங்களுக்கு நேரடியாக நிதியமைச்சர் இன்று இரவு டுவிட்டரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அருண் ஜெட்லி விளக்கம் அளிக்கப் போகிறார்.
டெல்லி: பொது பட்ஜெட் 2018 தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களை டுவிட்டரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அதற்கு தனது பதில்களை நேரடியாக அளிக்க தயாராக இருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் பல எதிர்ப்பார்ப்புகளை மக்களிடையே உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும்.
லோக்சபா தேர்தலுக்கு பிறகு அமையும் அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். எனவே, இந்த பட்ஜெட்டை அனைத்து தரப்பு மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அம்சங்கள் இருக்காது என்றும், கடினமானதாகவே இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே சூசகமாக கூறியுள்ளார். இருப்பினும், வருமான வரி செலுத்தும் சாமானியர்களுக்காக, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டு வரும் பட்ஜெட் தொடர்பான எந்த சந்தேகங்களும், கேள்விகளும் இருந்தால், அவற்றை நேரடியாக நிதியமைச்சரிடமே கேட்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜெட்லியின் டுவிட்டர் பக்கத்தில் #ASKYourFM என்ற ஹேஷ்டேக்கில் பதிவிடும் கேள்விகளுக்கு ஜெட்லி பதில் அளிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இன்று 7 மணிக்கு ஜெட்லியே மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளதால், பொது பட்ஜெட் தாக்கலை பலத்தரப்பினரும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.