சிறிய மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஜோதிராதித்ய சிந்தியா.. ம.பி.யில் நடப்பது என்ன?
போபால்: காங்கிரஸிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியாவின் அரசியல் நாடகத்திற்கு பின்னால் இருப்பது அவரது முதல்வர் பதவி ஆசை இல்லை என்றும் அதற்கு மேலான பதவிக்கு அவர் ஆசைப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கமல்நாத் ஆட்சியை கவிழ்க்க பாஜக பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்து வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தி செல்வது, பேரம் பேசுவது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் நேற்று இரவு கமல்நாத் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் 22 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அது போல் சிந்தியா உள்பட 17 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியின் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டனர்.
சிந்தியா முயற்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சி சிந்தியாவையும் எம்எல்ஏக்களையும் சமாதானம் செய்ய முயற்சித்தது. எனினும் ஒன்றும் ஆகவில்லை. இதனிடையே பிரதமர் மோடியை ஜோதிராதித்ய சிந்தியா சந்தித்து பேசினார். பின்னர் காங்கிரஸிலிருந்து அவர் வெளியேறினார். இவர் விலகியதற்கு பாஜக துணையுடன் மத்திய பிரதேசத்தின் முதல்வராக சிந்தியா முயற்சிக்கிறார் என கூறப்படுகிறது.
ஆசை
ஆனால் உண்மையில் அது இல்லை. சிந்தியாவிற்கு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது அவர் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருந்தது என்னமோ உண்மைதான். அது இப்போது இருப்பது நிஜம்தான். ஆனால் அதற்கு பாஜக ஒப்புக் கொள்ளாது. கடந்த சில தினங்களாக கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து வருவதில் முக்கிய மூளையாக செயல்பட்டவர் பாஜகவின் அந்த மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆவார்.
சித்து விளையாட்டு
இவர்தான் எம்எல்ஏக்கள் கடத்தல், பேரம் பேசுதல் உள்ளிட்ட சித்து விளையாட்டுகளை நடத்தி வந்தார். தற்போது அந்த விளையாட்டில் புதியவராக சிந்தியா வந்து சேர்ந்துள்ளார். எனவே தற்போது ஆளும் காங்கிரஸின் பலம் 102 ஆக குறைந்துவிட்டதால் நிச்சயம் அங்கு ஆட்சி கவிழ்ப்பு ஏற்படும். அப்போது சிவராஜ் சிங்தான் முதல்வராக வேண்டும் என கருதுவார். அதைத்தான் அவரது ஆதரவாளர்களும் விரும்புகிறார். சவுகானை விட்டுவிட்டு சிந்தியாவுக்கு முதல்வர் பதவியை கொடுக்க பாஜகவும் அவரது ஆதரவாளர்களும் விரும்ப மாட்டார்கள்.
சின்ன மீன்
எனவே சிந்தியாவின் முழு கவனமும் விசாலமாக உள்ளது. மாநிலத்தை விட மத்தியில் ஆட்சி செய்யவே விரும்புகிறார். எனவே பாஜகவில் இணைந்து மாநிலங்களவை எம்பியாவதே அவரது முதல் லட்சியம். பின்னர் மத்திய அமைச்சரவையில் இணைவதைதான் அவர் விரும்புவார். அதுதான் மோடியுடனான சந்திப்பின் போது டீலாக பேசப்பட்டிருக்கும். எனவே சிந்தியா சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க முயற்சிக்கிறார்.