எத்தனை அடி, எத்தனை போராட்டம்.. கைலாஷ் சத்யார்த்தியின் போராட்ட வாழ்க்கை!
லக்னோ: பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பின் தலைவரும், நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளவருமான கைலாஷ் சத்யார்த்தி, 2004ம் ஆண்டு உ.பி மாநிலத்தில் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகி உயிர் பிழைத்தவர் ஆவார்.
ரோமன் சர்க்கஸ் என்ற சர்க்கஸ் கம்பெனியிலிருந்து குழந்தைத் தொழிலாளர்களை மீ்ட்க அவர் முயன்றபோது சர்க்கஸ் நிர்வாகத்தைச் சேர்ந்த குண்டர்கள் அவரை சரமாரியாகத் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினர். துப்பாக்கியைக் காட்டியும் மிரட்டினர். ஆனாலும் உயிரைப் பொருட்படுத்தாமல் அவர்களிடம் நிராயுதபாணியாக மோதினார் சத்யார்த்தி.
2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.

சர்க்கஸில் சிக்கிய குழந்தைத் தொழிலாளர்கள்
தங்களது பிள்ளைகளை சர்க்கஸ் நிறுவனத்தார் குழந்தைத் தொழிலாளர்களாக வைத்திருப்பதாக 11 பேரின் பெற்றோர் சத்யார்த்தியிடம் குமுறினர். இதையடுத்து தனது இயக்கத்தாருடன் சேர்ந்து களத்தில் குதித்தார் சத்யார்த்தி.

கலெக்டருடன் ரெய்டு
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இதுகுறித்து அவர் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் சர்க்கஸில் ரெய்டு நடத்த உத்தரவிடப்பட்டது. கலெக்டரும் கூடவே வந்தார். கலெக்டர், சத்யார்த்தி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெற்றோர்கள் என சகலரும் சர்க்கஸ் நிறுவனத்திற்கு படையெடுத்தனர்.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மேலாளர்
ஆனால் சர்க்கஸ் கம்பெனிக்காரர்கள் குண்டர்களாக மாறினர். சர்க்கஸ் நிறுவன மேலாளர் சத்யார்த்தியை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். மற்றவர்கள், அனைவரையும் தாக்கத் தொடங்கினர். சத்யார்த்தியையும் தாக்கினர். இதில் அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் அவர் அசரவில்லை.

கால், தலையில் படுகாயம்
தலையிலும், காலிலும் சத்யார்த்திக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரது குழுவில் இடம் பெற்றிருந்த அவரது மகன் உள்பட பலரும் காயமடைந்தனர்.

கேரளாவிலும் துணிகர மீட்பு
இதேபோல அதற்கு முன்பு ஏப்ரல் மாதத்தில் கேரளாவின் பிரபலமான தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் கம்பெனியில் பத்து வருடத்திற்கும் மேலாக கொத்தடிமைகள் போல வேலை வாங்கப்பட்ட பல சிறார்களையும் சத்யார்த்தி மீட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications