டெல்லி வந்தது கலாம் உடல்.. பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடி, கெஜ்ரிவால் நேரில் அஞ்சலி
டெல்லி: "மக்களின் ஜனாதிபதி" மற்றும் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவருமான அப்துல் கலாம் அவர்களின் நல்லுடல் அசாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து இந்திய விமானப்படையில் தனிவிமானம் மூலமாக சரியாக 12.16 மணியளவில் டெல்லி பாலம் விமான நிலையம் வந்தடைந்தது.
அங்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் முப்படைத் தளபதிகளிடம் கலாம் அவர்களின் உடல் ஒப்படைக்கப்பட்டது. முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் அவருடைய உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் விமான நிலையத்தில் கலாம் அவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மலர்வளையம் வைத்து கலாமின் உடலிற்கு அஞ்சலி செலுத்தினார். டெல்லியின் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், அப்துல் கலாமின் உடலிற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர்களைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் அப்துல் கலாமின் உடலிற்கு மலர்வளையம் வைத்து தன்னுடைய இறுதி மரியாதையினைச் செலுத்தினார். அவரைத் தொடர்ந்து துணைக்குடியரசுத் தலைவர் அமீத் அன்சாரி அவர்களும் தன்னுடைய மரியாதையினைச் செலுத்தினார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள், அவருடைய இல்லத்தில் அப்துல் கலாமிற்கு இறுதி மரியாதையை செலுத்துவார் என்று செய்திகள் வெளியான நிலையில், பாலம் விமான நிலையத்திற்கே நேரடியாக வந்து தன்னுடைய இறுதி மரியாதையை மலர் வளையம் வைத்து பதிவு செய்துள்ளார்.
அங்கிருந்து ராணுவ மரியாதையுடன் அவருடைய இல்லம் அமைந்துள்ள ராஜாஜிமார்க் பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக எடுத்து செல்லப்பட உள்ளது.
இந்நிலையில் அப்துல் கலாம் அவர்களின் இல்லம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் சவுக் மற்றும் ராஜாஜிமார்க் பகுதியில் இருமருங்கிலும் ராணுவத்தினர் மற்றும் டெல்லி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் மற்றும் விஐபிகளுக்கு தனி பாதை, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தனி பாதை என்று இரண்டு பிரிவுகளாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர்களுக்கு கூட தனிதனித் தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் நகர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணுவ மரியாதை:
21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் ராஜாஜிமார்க் நோக்கி புறப்பட்டது. நாளை மதியம் 1 மணியளவில் அவருடைய உடல் ராமேஸ்வரம் வந்தடையும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அங்கு அவருடைய உறவினர்களால், ராணுவ மரியாதையுடன் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.