மாணவி மர்ம மரணம்.. பற்றி எரிந்த கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி! 144 நாட்களுக்கு பின் மீண்டும் திறப்பு
கள்ளக்குறிச்சி: 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணத்தை தொடர்ந்து வெடித்த கலவரம் காரணமாக சேதமடைந்த கனியாமூர் தனியார் பள்ளி 144 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் இயங்கி வரும் சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி கடலூரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
இதற்குக்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்கலாமா.. வேண்டாமா? தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்
கலவரம்
இது பெரும் போராட்டமாக உருவெடுத்த நிலையில் பள்ளியின் வாகனங்கள் மற்றும் பள்ளி கட்டிடத்தை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி தீ வைத்தது. இதனால் கனியாமூர் பகுதியே கலவரமயமானது. இந்த வன்முறை தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 300 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்ததனர்.
பெற்றோர்
மாணவி மரண வழக்கு தமிழ்நாடு அரசால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இந்த கலவரத்துக்கும் தங்களும் தொடர்பு இல்லை என்று மாணவி தாயார் தெரிவித்தார். அதே நேரம் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
மாணவி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சியில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குழு நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான குழு கள்ளக்குறிச்சிக்கு கடந்த ஜூலை 26 ஆம் தேதி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டது.
ஐவர் கைது
மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும் செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தங்களை விடுவிக்கக்கோரி அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
நிபந்தனை ஜாமீன்
முதல் 2 முறை ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், 2 ஆசிரியர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கலவரத்தால் கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்ட நிலையில், அங்கு பயின்ற மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
பள்ளி திறப்பு
இதற்கிடையே கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்திட பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்து வந்தது. இதற்கு உயர்நீதிமன்ற அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று 144 நாட்களுக்கு பிறகு பள்ளி வளாகம் மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது.
ஆன்லைன் வகுப்பு
இதர வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவரது பெற்றோர், உறவினர்கள், அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.