16வது லோக்சபா: இடைக்கால சபாநாயகராக கமல்நாத் நியமனம்
டெல்லி: 16வது லோக்சபாவின் இடைக்கால சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் செயல்படுவார் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புதிதாக அமைந்துள்ள லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் ஜுன் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதிகள் இன்று நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் இறுதிசெய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய அமைச்சரவைக்கூட்டத்தில் லோக்சபா கூட்டத்திற்கான தேதிகள் குறித்து விவாதிக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
16வது லோக்சபா சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பிக்கள் பதவியேற்றுகொள்வதற்கும் வசதியாக அடுத்த மாதம் லோக்சபா கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகராக கமல்நாத் செயல்படுவார் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கடந்த காங்கிரஸ் அரசின் நாடாளுமன்ற விவகாரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் கமல்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.