ஆட்டு மந்தைகளைப் போல் அரசியல்வாதிகள் பின் செல்லக் கூடாது: அமெரிக்காவில் கமல் பேச்சு
நியூயார்க்: தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டுமின்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் எல்லோரும் அரசியலில் இருக்க வேண்டும், ஆட்டு மந்தைகளைப் போல் நாம் அரசியல் மேய்ப்பவர்கள் பின் செல்லக்கூடாது என அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் கமல் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வருடாந்திர இந்தியக் கருத்தரங்கு நடைபெற்றது. அதில், இந்தாண்டு கருத்தரங்கின் முக்கிய கருப்பொருளாக "மாறி வரும் இந்தியா: வாய்ப்புகளும், சவால்களும்' என்பது குறித்து உரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் இந்திய மாநாட்டில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நடிகர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் மற்றும் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இவர்களில் கமல் பேச்சுரிமை குறித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
கற்றல் ஆர்வம்...
பள்ளிக் கல்வியைகூட முடிக்காதவன் நான் என்பதை உங்களிடையே பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால், கற்றல் என்ற அடிப்படை ஆர்வம் எனக்குள் இருந்ததால் இந்த மேடையில் உங்கள் எதிரில் பேச வந்துள்ளேன்.
ஆஸ்கர் விருது...
ஆஸ்கர் விருது என்பது ஒரு நல்ல அளவுகோல்தான். ஆனால், அதுவே சினிமாவுக்கான உலக அளவிலான மதிப்பீடாகிவிட முடியாது.
விழிப்புணர்வுக்காக....
எல்லோரும் அரசியலில் இருக்க வேண்டும். தேர்தல்களில் போட்டியிடும் நோக்கத்தில் அல்லாமல், விழிப்புணர்வுடன் இருப்பதற்காகவும், ஜாக்கிரதையாக இருப்பதற்காகவும் அரசியலில் இருக்க வேண்டும்.
ஆட்டு மந்தையல்ல...
ஆனால், ஆட்டு மந்தைகளைப்போல் அரசியல் மேய்ப்பர்களின் பின்னால் நாம் சென்று விடக்கூடாது' என இவ்வாறு அவர் பேசினார்.
முதல் தென்னிந்திய நடிகர்...
தென்னிந்தியாவை சேர்ந்த திரைத்துறை பிரபலங்களில் முதன்முறையாக இந்த வாய்ப்பை பெற்றவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் ஆர்வம்...
அதோடு, அரசியல் ஒரு சாக்கடை என்பதால் அதை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன் என பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்த கமல்ஹாசன், தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ‘எல்லோரும் அரசியலில் ஆர்வம்காட்ட வேண்டும்' என தனது பேச்சின்போது குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.