காவிரி: பெங்களூரில் கன்னட நடிக, நடிகையர் கண்டன கூட்டம்! ஜெ. மீது பாய்ச்சல் #TNNeedsKaveri
பெங்களூர்: காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் இன்று கன்னட சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
பெங்களூரிலுள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபை அருகேயுள்ள சிவானந்தா சர்க்கிளில் கண்டன கூட்டம் நடந்தது. இதில் நடிகர்கள் சிவராஜ்குமார், தர்ஷன், ரமேஷ் அரவிந்த், ஜக்கேஷ், உபேந்திரா, நடிகைகள் தாரா, ஸ்ருதி, ராகினி திவேதி, பாரதி விஷ்ணுவர்த்தன், லீலாவதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சுதீப் சூட்டிங்கிற்காக வெளி மாநிலத்தில் இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை.
இதில் பேசிய நடிகர், நடிகைகள், பெரும்பாலானோர் தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் தாக்கி பேசுவதிலேயே குறியாக இருந்தனர்.
முன்னணி நடிகரும், பாஜக பிரமுகருமான, ஜக்கேஷ் பேசுகையில் (பேரழகன் ரீமேக்கில் சூர்யா வேடத்தில் நடித்தவர்), கேஆர்எஸ் அணையில் தூர் வாரினால், கூடுதலாக, 4 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும்., அதை செய்தாலும் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டுவிடுகிறார்.
மேட்டூர் அணையில் தேக்கி வைக்க முடியாத நீர், கடலில் கலக்கிறது. அக்கறை இருக்குமானால், மேட்டூர் அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். எங்களுக்கும் ஒகேனக்கல்லில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும். அப்படி நீரை சேமிக்க திறமையில்லாமல், இரு மாநிலத்திற்கும் துரோகம் செய்கிறார் ஜெயலலிதா.
மண்டியாவில் பிறந்த ஜெயலலிதா, பிழைப்புக்காக மதராஸ் சென்றவர். ஆனால் பிறந்த மாநிலத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஜெயலலிதாவை அம்மா என்று தமிழக மக்கள் அழைக்கிறார்கள். அம்மா என்றால் கர்நாடக விவசாயிகளையும் அவர் தனது குழந்தைகள் போலத்தானே பார்க்க வேண்டும் என்றார்.
தாரா பேசுகையில், மேட்டூர் அணையில் தண்ணீரை தேக்க முடியாமல் கடலில் கலக்க விடும் தமிழக அரசு, கர்நாடகாவில் குடிக்க தண்ணீர் இல்லை என்று சொல்லி பார்த்தும், தண்ணீரை பிடிவாதமாக கேட்கிறது.
கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லை. ஆனால் தமிழ்நாட்டுக்கோ, 3வது பருவ விவசாயத்திற்குத்தான் தண்ணீர் தேவை. கர்நாடகாவை கிள்ளுக்கீரையாக மதித்து செயல்படுகிறார் ஜெயலலிதா என்றார்.
சிவராஜ்குமார் பேசுகையில், கர்நாடகா வாழ் தமிழர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும். எந்த மாநிலத்தில் இருக்கிறோமோ அந்த மாநிலத்தின் நலனை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
சுதீப் வரவில்லை என்றாலும் அம்பரீஷ் வரவில்லை என்றாலும் பிரச்சினையில்லை., திரையுலகை சேர்ந்த ஒருவர் வந்தாலும் அது பிறர் வந்ததற்கு சமம்தான். எனவே திரையுலகினரை குறை சொல்லாதீர்கள்.
நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசு சரியில்லை. நல்லவர்களை ஆளுவதற்கு தேர்ந்தெடுங்கள். அல்லது வாக்களிக்க போகாதீர்கள். பங்காரப்பா முதல்வராக இருந்தபோது, கர்நாடகா நன்மைக்காக திடமான முடிவுகளை எடுத்தார். இவ்வாறு சிவராஜ்குமார் பேசினார்.