சானியா மிர்சாவுக்கு கேல்ரத்னா விருது கிடைக்குமா? எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பெங்களூரு : கேல் ரத்னா விருதுக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து பாரா ஒலிம்பிக் வீரர் கிரிஷா தொடர்ந்த வழக்கை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம், 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு மிக உயரிய விருதான கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருது ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கேல்ரத்னா விருதுக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனையும், கடந்த ஜூன் மாதத்தில் நடந்த விம்பிள்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவருமான சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்வு குழுவினரால் சிபாரிசு செய்யப்பட்ட சானியா மிர்சாவுக்கு விருது வழங்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. விருது வழங்கும் விழா வருகிற 29-ந் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.
இதற்கிடையில் கேல்ரத்னா விருதை சானியா பெறுவதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது. 2012-ம் ஆண்டில் லண்டனில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.74 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய கர்நாடக மாற்று திறனாளி வீரர் எச்.என்.கிரிஷா, சானியாவுக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மாற்றுத் திறனாளி வீரர் கிரிஷா தாக்கல் செய்த மனுவில், ‘கேல்ரத்னா விருதை பெற சானியாவை விட எனக்கு அதிக தகுதி இருக்கிறது. விருதுக்கான தேர்வு வழிகாட்டி முறையின் படி எனக்கு 90 புள்ளிகள் கிடைக்கும்.
சானியா உள்பட மற்ற எந்தவொரு வீரருக்கும் எனக்கு நிகராக புள்ளிகள் கிடையாது. 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் உலக சாம்பியன் போட்டிகளில் வீரர்களின் செயல்பாடுகளை பொறுத்தே இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் நடந்த விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதை வைத்து விருதுக்கு சானியா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிகிறேன். விருது வழிகாட்டி முறைப்படி விம்பிள்டன் பட்டம் விருதுக்கான புள்ளி கணக்கில் வராது. எனவே விதிமுறைப்படி அதிக புள்ளிகள் பெற்றுள்ள எனக்கு கேல்ரத்னா விருது வழங்க உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மத்திய விளையாட்டு அமைச்சகமும், சானியா மிர்சாவும் வருகிற 15 நாட்களுக்குள் இதற்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.