ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டேன்.. குமாரசாமி ஷாக் பேச்சு
கர்நாடக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணீர் விட்டு அழுதார் குமாரசாமி
கர்நாடகா: இன்னும் எத்தனை நாட்களுக்கு நான் உயிரோடு இருப்பேனோ தெரியவில்லை, ஆனால் நான் நீண்ட காலம் உயிரோடு இருக்க மாட்டேன் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கண்ணீர் வழிய தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக குமாரசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மாண்டியாவில் மக்களிடையே அவர் பேசினார். அப்போது உரையாற்றும்போது அவர் கூறியதாவது:
அன்பு சம்பாதிக்க வேண்டும்
"கடவுள் அருளால் தான் இப்போது உயிருடன் இருக்கிறேன். இது பெரிய அதிர்ஷ்டம். நான் பணம் சம்பாதிப்பதற்காக முதல்வராக இருக்கவில்லை. அது என்னிடம் நிறைய உள்ளது. சொத்துக்கள் இருப்பதால் எனக்கு பணம் தேவையில்லை. ஆனால் மக்களை சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். மக்களின் அன்பு, பாசம் கிடைத்தாலே எனக்கு போதும்.
சேவை செய்வேன்
என்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் மக்களுக்கு துரோகம் செய்தால் நான் உயிரோடு இருந்தாலும் இறந்தது மாதிரி தான். எனக்கு ஏற்கனவே மாரடைப்பு தொந்தரவு இருப்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகவே தெரியும். நான் இன்னும் எத்தனை நாட் களுக்கு உயிருடன் இருப்பேனோ ஆனால் உயிருடன் இருக்கும் வரை மக்களுக்கு சேவை செய்வேன்.
சொல்ல மாட்டேன்
போன வருடம் நான் இஸ்ரேல் போனபோதே மாரடைப்பால் நான் இறந்திருக்க வேண்டும். ஆனால் மருத்துவர்கள் உதவிபயால் உயிரோடு வந்தேன். ஆனாலும் கடந்த 24-ம் தேதி கூட எனக்கு திரும்பவும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு போய் சிகிச்சை எடுத்து கொண்டேன். ஆனால் நான் ஏன் ஆஸ்பத்திரிக்கு போனேன் என்று சொல்ல மாட்டேன். ஒன்று நிச்சயம், நான் முதல்வராக இருக்கும் வரை கர்நாடகாவில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்ற விரும்புகிறேன்" என்று என கண்ணீர் மல்க கூறினார்.
சந்தோஷமாக இல்லை
கர்நாடக முதல்வர் குமாரசாமி பொதுவாகவே மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர். இவரது பொதுக்கூட்டம், பிரச்சாரம் போன்றவற்றில் எப்போது பேசினாலும் நா தழுதழுக்க பேசுவதோ, அல்லது மனம் வெடித்து கண்ணீர் சிந்துவதுதோ அடிக்கடி நடக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட "நான் முதல்வராகியும் சந்தோஷமாக இல்லை" என்று கூறி தொண்டர்கள் முன்னாலேயே தேம்பி தேம்பி அழுதார். இதேபோல சென்னபட்னாவில் நடந்த ஒரு கூட்டத்திலும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
மனோதிடம் வேண்டும்
குமாரசாமி இப்படி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்துவதை எதிர்க்கட்சிகள் கேலி செய்தன. கடுமையாக விமர்சனம் செய்தன. குமாரசாமி நடிக்கிறார், நடித்து மக்களிடையே ஓட்டு கேட்கிறார், அனுதாபம் தேடுகிறார் என்று பலவாறாக பேசினார்கள். ஆனால் கோடி கோடியாக பணத்தை வைத்திருக்கிறேன் என்று சொல்லும் குமாரசாமி இப்படி அழுதுதான் மக்கள் மனசில் இடம் பிடிப்பார் என்ற அவசியம் இல்லை. பொறுப்பில் இருப்பவர்களுக்கு தைரியமான மனோதிடம் வேண்டும் என்று கூட எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தார்கள்.
வலிகளின் அர்த்தம்
வகிக்கும் பொறுப்புக்கும் இயல்பான மனநிலைக்கும் சம்பந்தம் இல்லை. கண்ணீர், சிரிப்பு, துக்கம், எல்லாமே இயற்கையோடு தொடர்புடையது. குணநலன்களோடு ஒன்றிணைந்தது என்பதையும் விமர்சனம் செய்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! அது மட்டும் அல்லாமல் இஸ்ரேல் பயணத்தின்போது குமாரசாமிக்கு ஏற்பட்டது இரண்டாவது மாரடைப்பு என கூறப்பட்டது. தற்போது மீண்டும் உடல்நிலை கேடாகி, ஆஸ்பத்திரி சென்று மீண்டு வந்து மக்களிடம் பேசும்போது, கதறி அழுது குமாரசாமி பேசும் அந்த வார்த்தைகளில் உள்ள அர்த்தம் வலிகளை உணர்ந்தோருக்கு மட்டுமே புரியும்.