கர்நாடக தேர்தல்: விளையாடும் டெக்னாலஜி.. ஆன்லைன் மூலம் பணம் கொடுத்து வாக்கு கேட்கும் கட்சிகள்!
கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகள் ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகள் ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதை தடுத்து நிறுத்துவதற்கு வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் தீவிரமான கண்காணிப்பு நடத்தி வருகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. இரண்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி நேரடியாக பணம் கொடுத்தால் மாட்டிக்கொள்வோம் என்று ஆன்லைன் மூலம் பணம் கொடுக்கிறார்கள். அதோடு, முதலீடுகள் கொடுப்பது, வங்கியில் சிறிய அளவில் பிக்ஸ்ட் டெபாசிட் செய்து கொடுப்பது என நிறைய வித்தியாசமான முறைகளை கடைபிடிக்கிறார்கள்.
ஏற்கனவே இங்கு 4.13 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. 4.5 கிலோ தங்கம் வரை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் ஆணையம், தவறான முறையில் கைமாறும் பணம், நகைகளை கூர்ந்து கவனித்து வருகிறது.
இதனால் தற்போது ஆன்லைன் மூலம் பணம் பரிமாறப்படுகிறது. இதை தடுப்பது எப்படி என்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதோடு இதற்காக தேர்தல் ஆணையம் வருமானவரித்துறையின் உதவியையும் நாடியுள்ளது.