தமிழகத்தை போல கர்நாடகாவிலும் குறைந்த கட்டணத்தில் விரைவில் அரசு கேபிள் டிவி சேவை!
பெங்களூரு: தமிழகத்தை பின்பற்றி, கர்நாடக அரசும் கேபிள் டிவி நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக இம்மாநில தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரோஷன் பெய்க் தெரிவித்தார்.
பெங்களூருவில் செய்தியாளர்களுடன் பேசிய ரோஷன் பெய்க் மேலும் கூறியதாவது: கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூருவில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அடாவடியாக செயல்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகின்றன. மாத சந்தாவாக ரூ.400 முதல் ரூ.500 வசூலிக்கப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், பல சேனல்களை காண்பிக்காமல், அதற்கு தனியாக பணம் கட்ட வாடிக்கையாளர்களிடம் கேட்பதாகவும் புகார்கள் வருகின்றன.
எனவே, கர்நாடக அரசே கேபிள் தொழிலை நடத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இதுபோன்ற நடைமுறை உள்ளது. மாத சந்தா ரூ.100 என்ற அளவில் அனைத்து முக்கிய சேனல்களையும் அரசு கேபிள் ஒளிபரப்பும். இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சரிடம் ஆலோசிக்கப்படும். மத்திய அரசு பச்சைக்கொடி காண்பித்தால், விரைவிலேயே கர்நாடகாவில் அரசு கேபிள் ஒளிபரப்பு துவங்கும் என்றார்.