நித்தியானந்தாவுக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து இல்லை: கர்நாடகா ஹைகோர்ட் அதிரடி!
பெங்களூர்: தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரி சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடாவில் உள்ள பிடதியில் ஒரு ஆசிரமத்தை நடத்தி வருகிறார் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா. அங்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகஒரு சர்ச்சை எழுந்தது.
மேலும் நடிகை ரஞ்சிதாவுடனும் அவர் அந்தரங்கமாக இருந்ததாகவும் சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக கர்நாடக போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆண்மை சோதனை
இந்த வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் போலீசார் முடிவு செய்த போது, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் அந்த சோதனை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார் நித்தியானந்தா.
பல ஆண்டுகளாக இம்மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் நித்தியானந்தாவின் வேண்டுகோளை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று பெங்களூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
பிடிவாரண்ட் ரத்து இல்லை
இந்த நிலையில், ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா தொடர்பான வழக்கு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது நித்தியானந்தா ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவையும் இன்று தள்ளுபடி செய்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ராம்நகர் நீதிமன்றத்தில் 7-ந் தேதி ஆஜராகவும் உத்தரவிட்டது.
இதனால் நித்தியானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் வரும் 6-ந் தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. அதன் பின்னர் அவர் 7-ந் தேதி ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.