தமிழகத்திற்கு 50,000 போர்வைகள், பால் பவுடர் அனுப்ப கர்நாடக முதல்வர் உத்தரவு
பெங்களூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடுக்கு, பால் பவுடர் மற்றும், போர்வைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா கூறினார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு உதவி செய்வது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, தலைமைச் செயலர், கவுசிக் முகர்ஜி, கர்நாடக பால் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டம் முடிந்த பிறகு ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு பல வகைகளிலும் உதவி செய்ய கர்நாடக அரசு தயாராக உள்ளது. அங்குள்ள கன்னடர்கள் கஷ்டத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை ஆகும்.
அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அவசர உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் எண் 1070ஐ தொடர்பு கொள்ள கட்டணம் கிடையாது. இதற்கு அதிக எண்ணிக்கையில் அழைப்புகள் வந்தன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு தற்போது, போர்வைகளும், பால் பவுடரும்தான் தேவை என்று தமிழகம் கோரிக்கைவிடுத்துள்ளது. எனவே, தமிழ்நாட்டிற்கு தரமான பால் மற்றும் பால் பவுடரை அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். 50 ஆயிரம் போர்வைகளும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு அறிவித்த ரூ.5 கோடி நிதி உதவியை தேவைப்படும்போது கேட்கிறோம் என்று தமிழக அதிகாரிகள் கூறினார்கள். அவர்கள் கேட்டபிறகு, கர்நாடக அரசு அதிகாரிகள், சென்னைக்கு நேரில் சென்று ரூ.5 கோடி நிதியை தமிழக அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். இது தவிர வேறு எந்த உதவியையும் செய்ய கர்நாடக அரசு தயாராக உள்ளது.
அரசியல் ரீதியாக தமிழக அரசோடு, பிரச்சினைகள் இருந்தாலும், அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்வது எங்களது கடமை ஆகும். ஜெயலலிதாவுடன் சித்தராமையா பேசி நிவாரண பணிகள் பற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
நிவாரண பொருட்கள் மீது ஜெயலலிதா புகைப்படம் ஒட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு எதையும் செய்ய முடியாது. நாங்கள் நல்லெண்ண அடிப்படையில்தான் பொருட்களை அனுப்புகிறோம். அதில் ஜெயலலிதா போட்டோ ஒட்டப்பட்டாலும் கவலையில்லை. இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார்.