மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி... பிரதமரை சந்தித்த பின் கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்
டெல்லி : காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனைத்து முயற்சிகளையும் கர்நாடக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நிலவும் வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வறட்சியை சமாளிக்க, மத்திய அரசிடம் நிவாரணம் கேட்பதற்காக, கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்து கட்சியினர் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லி சென்றனர்.
டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த அவர்கள், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மகராஷ்ட்ரா, கோவா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் பாயும் மகாதாயி நதி பிரச்னை குறித்தும் எடுத்துரைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, வறட்சி குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் விரைவில் கர்நாடகா அனுப்பப்படுவர் என்று பிரதமர் மோடி உறுதியளித்ததாக தெரிவித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனைத்து முயற்சிகளையும் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்படுத்தும் எனவும் அவர் கூறினார்.