'கெஜ்ரிவால் எபெக்ட்'.. ஆடம்பரத்தில் இருந்து எளிமைக்கு மாறும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரே ராஜே
ஜெய்ப்பூர்: சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும் போது தனது வாகனத்தை நிறுத்தி செல்லவேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிவப்பு விளக்கு பயன்படுத்தப்பட்ட காரை பயன்படுத்துவதை தவிர்த்துள்ள வசுந்தராவின் இந்த எளிமை ராஜஸ்தான் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளதாம்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தின்போது எளிமையாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். அதை பின்பற்றும் விதமாக அவர் ஆடம்பரங்களை தவிர்த்து வருகிறார்.
அவரை பின்பற்றி, அரச பரம்பரையில் இருந்து வந்த ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் ஆடம்பரத்தை குறைக்க ஆரம்பித்துள்ளார்.
அதன்படி அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டையே முதல்வர் இல்லமாக மாற்ற முடிவு செய்துள்ளார்.
விஐபி கார்
இந்நிலையில், தான் செல்லும் பாதையில் போக்குவரத்தை நிறுத்தக்கூடாது, தனது பாதுகாப்புக்காக நிறைய போலீசார் வரக்கூடாது என்று உத்தரவிட்ட அவர், மேலும் ஒரு அதிரடியாக சிகப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரை பயன்படுத்த போவதில்லை என தெரிவித்துள்ளார்.
பயணிகள் விமானம்
மேலும், இனி வெளியூர் செல்ல அரசுக்கு சொந்தமான விமானத்தை பயன்படுத்துவது இல்லை. சாதாரண பயணிகள் செல்லும் விமானத்திலேயே செல்வது என்று முடிவு செய்துள்ளார்.
அவசர கால தேவைக்கு மட்டுமே அரசு விமானத்தை பயன்படுத்துவது என்றும் வசுந்தரா முடிவு செய்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வரின் இந்த திடீர் எளிமை முடிவை அம்மாநில மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
ஆடம்பரத்தில் இருந்து எளிமை
குவாலியர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவரான வசுந்தரா ராஜே சிந்தியா, கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டுவரை ராஜஸ்தான் முதல்வராக இருந்த போது மக்கள் பணத்தை ஆடம்பராக செலவு செய்ததாக விமர்சனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்தே அடுத்த தேர்தலில் அவர் ஆட்சியை பறிகொடுத்தார். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ராஜஸ்தான் முதல்வராக அமர்ந்துள்ள வசுந்தரா, மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடிக்கவே எளிமையை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார் என்கின்றனர் பாஜகவினர்.