சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்த கேரள அரசு தயார்
திருவனந்தபுரம்: சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் செல்ல அனுமதிப்பது பற்றி கருத்துக்கணிப்பு நடத்த கேரள அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். ஆனால், இந்த கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்ல அனுமதி கிடையாது.
ஆனால், இந்த முறையை மாற்றி, அனைத்து வயது பெண்களும் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் தேவசம் போர்டு அதிகாரிகள் கூட்டத்தில் கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு செல்ல அனுமதிப்பது பற்றி கருத்துக் கணிப்பு நடத்த கேரள அரசு தயாராக இருப்பதாகவும், இந்த பிரச்சினையில் கோர்ட்டு உத்தரவுகளை விட, கருத்து ஒற்றுமை ஏற்படுவது முக்கியம் என்றும், அரசியல் ரீதியிலான முடிவு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உதவாது' என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி இந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், இந்த விஷயத்தில் அரசு தனது கருத்தை மக்கள் மீது திணிக்காது என்றும் சுரேந்திரன் கூறியுள்ளார்.