ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் கொலை: கேரளாவில் முழு அடைப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொறுப்பாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முழு அடைப்பு நடைபெற்று வருகின்றது.
கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த தலசேரி கதிரூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்.
இவர் தலசேரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளராக இருந்தார்.
வழிமறித்த கும்பல்:
நேற்று காலை கதிரூரில் உள்ள வீட்டில் உள்ள நண்பர் பிரமோத் என்பவருடன் ஒரு காரில் வெளியே சென்றார். டைமண்ட் சந்திப்பு அருகே சென்றபோது அவர்களின் காரை ஜீப்பில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தது.
வெடிகுண்டு தாக்குதல்:
அவர்கள் மனோஜ் கார் மீது வெடிகுண்டுகளை வீசினர். இதில் கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது. உடனே ஜீப்பில் இருந்த கும்பல் காரில் இருந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் பிரமோத்தை வெளியே இழுத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவர்கள் படுகாயத்துடன் மயங்கி விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
மனோஜ் பரிதாப பலி:
இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு வந்த ஊர் மக்கள் மனோஜ், பிரமோத் ஆகிய இருவரையும் மீட்டு தலசேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ் பரிதாபமாக இறந்தார். பிரமோத் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குவிந்த தொண்டர்கள்:
மனோஜ் கொல்லப்பட்ட தகவல் அறிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மற்றும் பாஜகவினர் தலசேரி பகுதியில் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. மனோஜை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், பா.ஜனதா கட்சியினரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வீசி தாக்குதல்:
அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். மேலும் மனோஜ் கொலைக்கு கண்டனம் தெரிவித்து இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தனர்.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை:
இந்த போராட்டம் காரணமாக மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக உளவுப்பிரிவு போலீசார் தகவல் கொடுத்ததை தொடர்ந்து கேரளாவில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. இன்று நடைபெறவிருந்த பெரும்பாலான தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
வர்த்தக நிறுவனங்கள் மூடல்:
வர்த்தக நிறுவனங்களும் மூடியே கிடந்தன. கண்ணூர் தலசேரி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. முழு அடைப்பையொட்டி மாநிலத்தின் பதட்டமான பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கண்ணூரில் ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
எல்லையில் நிறுத்தம்:
கேரளாவில் நடந்த முழு அடைப்பு காரணமாக நாகர்கோவிலில் இருந்து கேரளா செல்லும் அனைத்து தமிழக பஸ்களும் கேரள எல்லையான களியக்காவிளையிலேயே நிறுத்தப்பட்டது.
வெறிச்சோடிய சாலைகள்:
பாஜக தலைவர் அமித்ஷா கேரளாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மனோஜ் கொலை செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷா கண்டனம்:
மேலும் இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமித்ஷா கூறுகையில், இம்மாநிலத்தில் பாஜக பிரமுகர்கள் சுமார் 250 பேர் வரை கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
தீவிர கண்காணிப்பு:
கேரளாவில் நடைப்பெறும் முழுஅடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.