காவலாளியை கார் ஏற்றி கொன்ற கேரள பீடி தொழிலதிபருக்கு ஆயுள் - ரூ. 70 லட்சம் அபராதம்
திருவனந்தபுரம்: வீட்டின் கேட்டை தாமதமாக திறந்த காவலாளியை தாக்கி அவர் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவத்தில் கேரளவைச் சேர்ந்த பிரபல பீடி தொழிலபதிபருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 70 லட்சம் அபராதமும் விதித்து திருச்சூர் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் பீடி தொழிலதிபரான முகமது நிஜாம், நள்ளிரவில் வீட்டிற்கு வந்த போது, கேட்டை திறக்க தாமதமானதால், கையில் கம்பியுடன் சென்று காவலாளியை முகமது நிஷாம் தாக்கியுள்ளார். மேலும், அவரது ஹம்மர் காரை இயக்கி காவலாளி சந்திரபோஸை நோக்கி வேகமாக ஓட்டியுள்ளார். சுவரில் வைத்து சந்திரபோஸை காரால் இடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த காவலாளி சந்திரபோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மூன்று வாரங்கள் கழித்து உயிரிழந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திரிசூர் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்ததையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீத்மிமன்றம், கொலை உட்பட 9 பிரிவுகளில் முகம்மது நிஜாம் குற்றவாளி என உறுதி செய்தது.
கிங் பீடி நிறுவன இயக்குநராக உள்ள நிஜாமுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமாக சொத்துக்கள் உள்ளன.முகமது நிஷாம் தனது பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்தை மதிக்காமல், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். காவலாளியை கார் ஏற்றி கொன்றது தொடர்பாக திருச்சூர் போலீசார் முகமது நிசாம் மீது போலீசார் கொலை வழக்கு, சமூக விரோத செயலில் ஈடுபடுவது, வேண்டுமென்றே உயிரை வதைத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதன் மீதான விசாரணை திருச்சூர் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் உதயபானு ஆஜராகி வாதாடினார். முகமது நிஜாமுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். இதில் சிலர் பிறழ் சாட்சிகளாக மாறினர். என்றாலும் அரசு வக்கீல் உதயபானு பல்வேறு ஆதாரங்களை கோர்ட்டில் வலுவாக தாக்கல் செய்தார்.
இதையடுத்து நேற்று இந்த வழக்கில் செசன்ஸ் நீதிபதி சுதீர் தீர்ப்பு கூறினார். அதில் காவலாளி சந்திரபோசை வதைத்து கொலை செய்ததால் முகமது நிஜாம் குற்றவாளி என தீர்ப்பளிப்பதாக கூறினார். தீர்ப்பை கேட்பதற்காக கோர்ட்டில் ஆஜரான முகமது நிஜாமிடம் தண்டனை குறித்து எதுவும் கூற விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு முகமது நிஜாம் பதில் எதுவும் கூறாமல் மவுனமாக நின்றார்.
அப்போது முகமது நிஜாமுக்காக ஆஜரான வக்கீல் எழுந்து முகமது நிஜாம் கூட்டுக்குடும்பத்தில் வசித்து வருகிறார். அவர் வேண்டுமென்றே இந்த தவறை செய்யவில்லை. எனவே அவருக்கு குறைந்த தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வக்கீல் உதயபானு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து முகமது நிஜாமுக்கான தண்டனை விபரத்தை வியாழக்கிழமை பிற்பகல் அறிவிப்பதாக நீதிபதி கூறினார். அதன்படி இன்று மதியம் ஒரு மணிக்கு தண்டனை விவரத்தை நீதிபதி சுதிர் அறிவித்தார். அதில் குற்றவாளி முகம்மது நிஜாமுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.70 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராத தொகையில் ரூ.50 லட்சத்தை கொலையுண்ட சந்திரபோஸ் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.