நடுவில் எந்தப் பக்கத்தையும் விட முடியாத சுவாரஸ்யம்...‘பத்மவிபூஷண்’ குஷ்வந்த் சிங்கின் 'வாழ்க்கை'
காலம் அவரை நம்மிடம் இருந்து பிரித்த போதும் காலத்தை வென்ற காவியங்களாக அவரது எழுத்துக்கள் நம்மிடம் நிலைத்து நின்று அவர் புகழ் பேசுகின்றன.
பத்திரிகையாளராக மட்டுமின்றி, இலக்கியத் துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் குஷ்வந்த் சிங். நாட்டின் உயரிய விருதுகளைப் பெற்ற அவரது வாழ்வின் சில முக்கிய தருணங்கள் தொகுப்பாக...
பிரபலக் குடும்பம்...
தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 1915ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி குஷ்வந்த் சிங் பிறந்தார். இவரது தந்தை சர் ஷோபா சிங், டெல்லியில் புகழ் பெற்ற கட்டுமான நிறுவனர். இவரது உறவினரான சர்தார் உஜ்ஜல் சிங், பஞ்சாப் மற்றும் தமிழகத்தின் முன்னாள் ஆளுநர்.
கல்வி....
டெல்லியில் பள்ளி படிப்பையும், லாகூர், டெல்லி மற்றும் லண்டனில் கல்லூரி படிப்புகளையும் முடிந்த குஷ்வந்த் சிங், சிறந்த பத்திரிகையாளராக திகழ்ந்தார்.
பத்திரிக்கை ஆசிரியர் பணி...
நகைச்சுவை உணர்வு மிகுந்த குஷ்வந்த் சிங் பல்வேறு கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்திய அரசு பத்திரிகையான யோஜனா உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் அவர் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.
அரசியல் வாழ்க்கை....
பத்திரிகைத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், கடந்த 1980 முதல் 1986ஆம் ஆண்டு வரை, ராஜ்யசபா உறுப்பினராகவும் குஷ்வந்த் சிங் பொறுப்பு வகித்துள்ளார்.
மதச்சார்பின்மை நூல்கள்...
இலக்கியத்திலும் இவர் சிறந்து விளங்கினார். அவர் எழுதிய பல நூல்கள், நகைச்சுவை, வரலாறு மற்றும் மதச்சார்பின்மை போன்றவற்றை மையப் பொருளாக கொண்டவையாகும்.
பத்மபூஷண்...
இதற்காக கடந்த 1974ஆம் ஆண்டு, குஷ்வந்த் சிங்குக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. எனினும், கடந்த 1984ஆம் ஆண்டு சீக்கிய பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்த சம்பவத்தை கண்டித்து, பத்மபூஷண் விருதை குஷ்வந்த் சிங் திரும்ப ஒப்படைத்தார்.
சிவிலியன் பத்மவிபூஷண் விருது...
இதன் பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய அரசு குஷ்வந்த் சிங்குக்கு நாட்டின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவித்தது.
குஷ்வந்த்நாமா...
இவர் கடந்தாண்டு தனது சுயசரிதை நூலான "குஷ்வந்த்நாமா" வை வெளியிட்டார்.
அவரது படைப்புகளில் சில...
தி மார்க் ஆப் விஷ்ணு அண்ட் அதர் ஸ்டோரீஸ் (விஷ்ணு மற்றும் பிற கதைகளின் தழும்புகள்)
தி ஹிஸ்டரி ஒப் சீக்ஸ் (சீக்கியர்களின் வரலாறு)
ட்ரெயின் டு பாகிஸ்தான் (பாகிஸ்தான் செல்லும் ரயில்)
தி வாய்ஸ் ஆப் காட் அண்ட் அதர் ஸ்டோரீஸ் (கடவுளின் குரலும் பிற கதைகளும்)
ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல் (நைட்டிங்கேல் பறவையின் பாடலை என்னால் கேட்க முடியாது)
தி பால் ஆப் பஞ்சாப் (பஞ்சாப் பேரரசின் வீழ்ச்சி)
ட்ராஜெடி ஆப் பஞ்சாப் (பஞ்சாபின் அவலம்)