டெல்லி பள்ளி மாணவன் கொலை வழக்கு.. பீட்சா வாங்கி கொடுத்து சக மாணவனிடம் உண்மையை கறந்த சிபிஐ
டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் கொல்லப்பட்டதில் கொலையாளி பிட்சாவுக்கு ஆசைபட்டு உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறான்.
டெல்லி: இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். கழுத்தறுக்கப்பட்டு மரணம் அடைந்த அந்த சிறுவனின் பெயர் பிரத்தியுமான் தாக்குர்.
தனியார் பள்ளியில் நடந்த இந்த கொலையில் முதலில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.ஆனால் அந்த கொலையை செய்தது அதே பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் என கூறப்பட்டது.
தற்போது அந்த மாணவன் தான் செய்த கொலையை தனது பெற்றோர்கள் முன்னிலையில் ஒப்புக்கொண்டு இருக்கிறான். மேலும் அவன் பிட்சாவுக்கும் சாக்லேட்டுக்கும் ஆசைபட்டு உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறான்.
பள்ளி கழிவறையில் கொலை
டெல்லியின் குர்கான் பகுதியில் இருக்கும் ரேயான் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரத்தியுமான் தாக்குர் என்ற மாணவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதையடுத்து போலீசார் அந்த கொலை குறித்து விசாரணை செய்தனர். முதலில் அந்த பள்ளியின் கண்டெக்டர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். பின் அவர்தான் குற்றவாளி எனப்பட்டது.
பள்ளி மாணவனும் சம்பந்தம்
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்பின் இந்த கொலைக்கு அதே பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவனும் காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சிபிஐ நடத்திய விசாரணையியல் கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன் தனது கொலையை ஒப்புக் கொண்டு இருக்கிறான். மேலும் அவன் தான் கொலை செய்ததை விளக்கும் போது அந்த இடத்தில் அவனது பெற்றோர்களும், மூன்றாம் நபர் ஒருவரும் இருந்து இருக்கின்றனர்.
பிட்சாதான் முக்கியம்
இந்த விசாரணையில் முதலில் அந்த மாணவன் எதுவும் சொல்லாமல் முரண்டு பிடித்து இருக்கிறான். அதன்பின் அவனுக்கு சிபிஐ போலீசார் நிறைய சாக்லேட்டும், பிட்சாவும் வாங்கி கொடுப்பதாக கூறியிருக்கின்றனர். அதுவரை அமைதியாகி இருந்த அந்த பையன், பிட்சா மீது இருக்கும் மோகம் காரணமாக தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டான். மேலும் கத்தி வாங்கிய இடத்தையும் குறிப்பிட்டான்.
டெல்லி போலீஸ் மீது வழக்கு
இந்த நிலையில் பஸ் கண்டெக்டர் மீது பொய் வழக்கு போட்டு அவரை மிரட்டி குற்றம் செய்ததாக போலீஸ் ஒப்புக்கொள்ள வைத்தது தெரிய வந்து இருக்கிறது. இந்த நிலையில் அந்த கண்டெக்டர் தற்போது போலீசார் மீது மான நஷ்டஈடு வழக்கு பதிய இருக்கிறார். மேலும் அவர் தற்போது பெயிலுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்.