ஆர்.எஸ்.எஸ். வளர்த்த கிளிதான் ராஜ்நாத்சிங்: லாலுபிரசாத்
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் வளர்க்கப்பட்ட கிளிதான் ராஜ்நாத்சிங் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலுபிரசாத் யாதவ் சாடியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில், லாலு பிரசாத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஆர்எஸ்எஸ் அமைப்பால் போதிக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட கிளிதான் ராஜ்நாத் சிங். நாட்டின் பிரதமர் பதவிக்கான பாஜகவின் வேட்பாளர் நரேந்திர மோடி அல்ல; உண்மையில், நானே அப்பதவிக்கான வேட்பாளர்' என்று தனது ராஜபுத்திர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசும்போது ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
நாட்டு மக்களைத் திசைதிருப்புவதற்காக பாஜக பிரதமர் பதவி வேட்பாளராக மோடி நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், பிகார் மக்களை மோடியோ அல்லது ராஜ்நாத் சிங்கோ முட்டாள்களாக்க முடியாது. அந்த இருவருக்கும், அரசியலில் "ஏபிசிடி'யை கற்றுக் கொடுப்பதற்கான போதிய அறிவு பீகார் மக்களிடம் உள்ளது
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
காங்கிரஸ் கிளி லாலு
லாலுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் ஷானவாஸ் ஹுசைன் கூறுகையில், காங்கிரஸால் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கிளிதான் லாலு பிரசாத். லாலுவை சிறையில் அடைத்தது, பின்னர் பிரசாரத்திற்காக அவரை ஜாமீனில் விடுவித்தது என அனைத்துமே காங்கிரஸ்தான். அதனால்தான், அவர் காங்கிரஸ் மொழியில் பேசி வருகிறார்' என்றார்.