'சம்பந்தி' முலாயம் என்ன வேணா சொல்லட்டும்.. விமர்சிக்காதீங்கப்பா... அடக்கி வாசிக்கும் லாலு
பாட்னா: நாடே எதிர்பார்க்கும் பீகார் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவரான முலாயம்சிங் யாதவை, யாரும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வாக்குகள் நவம்பர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ்குமாருக்கு லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவளிக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்ததை பாடமாக எடுத்துக் கொண்டு தற்போதைய சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்ட நிதிஷ், லாலு முயற்சிகளை மேற்கொண்டனர். இது கூட்டணியாகவும் உருவானது.
மெகா கூட்டணி
இந்த கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. தொடக்கத்தில் இருந்தே இந்த கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு சிக்கல் இருந்து வந்தது. ஒருவழியாக ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 100 தொகுதிகளில் போட்டியிட்டுக் கொள்வது; எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக்கு பகிர்வது என முடிவு அறிவிக்கப்பட்டது.
வெளியேறிய சமாஜ்வாடி
இந்த வகையில் சமாஜ்வாடி கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இதில் அதிருப்தி அடைந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து முலாயம்சிங்கை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கூட்டணியைவிட்டு வெளியேறுவதில் அவர் உறுதியாக இருந்துவிட்டார்.
என்னோட சம்பந்தி..
இந்நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார் என்பதற்காக முலாயம்சிங் யாதவை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று லாலு பிரசாத் யாதவ் தமது ராஷ்டிரிய ஜனதா தள தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், முலாயம்சிங் யாதவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று கட்சியினரை மட்டுமல்ல முதல்வர் நிதிஷ்குமாரையும் கேட்டுக் கொண்டுள்ளேன். முலாயம்ஜி நம்மை விட உயரமான தலைவர் என்பது மட்டுமல்ல.. என்னுடைய சம்பந்தியும் கூட... (லாலுவின் மகள், முலாயம்சிங் யாதவின் பேரனை மணந்துள்ளார்)
அவர் கோபப்பட்டால் அவருக்கு மஞ்சள் நிற சால்வை போட்டு (பீகார் கலாசாரப்படி திருமணங்களில் அணிவிப்பது) அமைதிப்படுத்திவிடலாம் என்று கூறியுள்ளார்.
முடிவெடுக்க உரிமை உண்டு
இதேபோல் முதல்வர் நிதிஷ்குமாரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவும் லாலு பிரசாத் யாதவும் முலாயம்சிங்கை கூட்டணியில் நீடிக்க வைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அது பலனளிக்காமல் போய்விட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்து முடிவெடுக்க உரிமை இருக்கிறது ..அந்த வகையில் சமாஜ்வாடி கட்சிக்கும் அப்படி ஒரு முடிவெடுக்க உரிமை உள்ளது என்றார்.