"மேற்கு வங்கத்தில் கம்பேக் தருவோம்.." திடீரென உற்சாகமடைந்த கம்யூனிஸ்ட்கள்! ஓ இதுதான் காரணமா
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஜன் சக்ரவர்த்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்,
மேற்கு வங்கத்தில் ஒரு காலத்தில் மிகவும் வலுவாக இருந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 1977இல் தொடங்கி சுமார் 39 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் இடதுசாரிகள்.
கடந்த 2011ஆம் ஆண்டு மம்தா தலைமையிலான திரிணாமுல் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார்கள். அதன் பிறகும் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் சிபிஎம் பலவீனமடைந்தே வந்தது.
உ.பி.: யோகி போட்டியிடும் கோரக்பூர் உட்பட.. 57 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்! பலத்த எதிர்பார்ப்பு
சிபிஎம்
குறிப்பாகக் கடந்த ஆண்டு நடைபெற்ற 2022 மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் இப்போது பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. இந்தச் சூழலில் சமீபத்தில் அங்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 107 உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் ஒரு நகராட்சியை சிபிஎம் கைப்பற்றி உள்ளது.
கம்பேக்
மேற்கு வங்கத்தில் நடந்த இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியான முறைகேடுகள் நடந்த போதிலும் ஒரு நகராட்சியை இடதுசாரிகள் கைப்பற்றி உள்ளதாகவும் மாநிலத்தில் சிபிஎம் விரைவில் ஒரு கம்பேக்கை தரும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஜன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றிய பாஜகவின் வாக்கு சதவிகிதம் குறையத் தொடங்கி உள்ளதாகவும் சுஜன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
முறைகேடு
இது குறித்து அவர் கூறுகையில், "இடதுசாரிகள் இப்போது தேர்தல்களில் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கி உள்ளனர். இந்தத் தேர்தலில் அதிகப்படியான மோசடிகள் நடைபெற்ற போதிலும், வாக்கு சதவீதங்கள் நாங்கள் கம்பேக் தருவதையே காட்டுகிறது. இந்தத் தேர்தலில் திரிணாமுல் கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில், சில இடங்களில், திரிணாமுல் வேட்பாளர்கள் மற்றும் குடும்பத்தினரால் கூட வாக்களிக்க முடியவில்லை. அவர்கள் வாக்களிக்கச் சென்ற போது, ஏற்கனவே அவர்கள் வாக்கு முறைகேடாகச் செலுத்தப்பட்டு இருந்தன.
மக்களுக்கு நம்பிக்கை இல்லை
ஆளுங்கட்சி கட்சியினர் கள்ள ஓட்டுகளைப் போட்டனர். பட இடங்களில் பொதுமக்களை வாக்களிக்க திரிணாமுல் கட்சியினர் அனுமதிக்கவில்லை. இது திரிணாமுல் கட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதையே காட்டுகிறது" என்றார். இந்த உள்ளாட்சித் தேர்தலில் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹெர்பூர் நகராட்சியை இடதுசாரிகள் கைப்பற்றினர். பாஜக எந்த நகராட்சியிலும் வெற்றி பெறவில்லை.