நோன்பு இருந்தவர் வாயில் சப்பாத்தி திணித்த சிவசேனா எம்பிக்கள் செயல் தவறு: அத்வானி
டெல்லி: ரம்ஜான் நோன்பு இருந்த ரயில்வே ஊழியர் வாயில் சிவசேனை எம்.பி. ராஜன் விச்சாரே செயலுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அதிருப்தி வெளிப்படுத்தினார்.
இச்சம்பவம் குறித்து அத்வானி கருத்தை நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்து அத்வானி கூறுகையில் "இது தவறு" என்று கூறிவிட்டு சென்றார். டெல்லியிலுள்ள மகாராஷ்டிரா பவனில் சப்பாத்தி தரக்குறைவாக இருந்ததாக குற்றம்சாட்டி ரயில்வே கேட்டரிங் பிரிவின் சமையலறைக்குள் அத்துமீறி நுழைந்த ராஜன் விச்சாரே தலைமையிலான 11 சிவசேனை எம்.பி.க்கள் கேட்டரிங் சூப்பர்வைசரிடம் தகராறு செய்தனர்.
அப்போது, சூப்பர்வைசர் வாயில் சப்பாத்தியை திணித்து, இதை உங்களால் சாப்பிட முடியுமா என்று எம்.பி அடாவடியாக கேட்டார். எம்.பி கேட்ட சூப்பர்வைசர் அர்ஷத் என்ற பெயர் கொண்ட முஸ்லிம். அவர் ரம்ஜான் நோன்பு இருந்துவருகிறார். பகலில் அவர் சாப்பிடுவதில்லை. எனவே இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே சிவசேனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் கட்சி எம்.பிக்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் சப்பாத்தியை திணிக்கவில்லை. இந்து மக்களின் ஆதரவு கட்சியாக இருந்தபோதிலும், சிவசேனை என்பது இந்திய கட்சி. இந்துக்கள் நலனை காக்க போராட்டம் நடத்தும் அதே நேரத்தில், பிற மதத்தவர்கள் உணர்வுகளை புண்படுத்த மாட்டோம். சப்பாத்தியின் தரம் குறித்து விவாதம் நடந்ததுதான் இப்போது பெரிதுபடுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.