சுப்ரீம் கோர்ட்டுக்கு பதில் அளிக்க முடியாது.. எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து சுமித்ரா விளக்கம்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், காங்கிரஸிற்கு எதிர்க்கட்சித்தலைவர் அந்தஸ்தைத் தராமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.
இதற்கிடையே லோக்பால் அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லோக்பால் தேர்வு குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் மிக முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை யாருக்கும் அளிக்காமல் நீண்ட நாட்களுக்கு தள்ளி வைக்க முடியாது என்றும் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த விவகாரம் குறித்து புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் பதில் அளிக்க கேட்டுக்கொண்டுள்ளது. இதில் சபாநாயகர் பதில் அளிக்க முடியாது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் குறித்து மத்திய அரசே பதிலளிக்கும். பின்னர் நான் எப்படி பதிலளிக்க முடியும். என்ன விதி உள்ளது என இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளிப்பார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதே எனது பணி' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.