தொடங்கியது பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை.. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
பூரி/ அகமதாபாத்: ஒடிஷா மாநிலத்தின் பழமைவாய்ந்த புரி ஜெகந்நாதர் கோயிலின் புகழ்பெற்ற ரத யாத்திரை புதன்கிழமையன்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த ரத யாத்திரை திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். போலீசாருடன் இணைந்து துணை ராணுவப்படையினரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிஷா மாநிலம், புரியில் அமைந்துள்ள ஜெகந்நாதர் கோயில், வைணவத் திருக்கோயில்களில் முக்கியமானதாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில், மூலவர்களான ஜெகந்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திராதேவி திருமேனிகள் மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜெகநாதர் கோயிலில் ஆண்டு தோறும் ரதயாத்திரை விழா நடைபெறும். இந்த விழாவின் போது ஜெகநாதர், பாலபத்ரா, சுப்த்ரா தேவி ஆகிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட 3 பிரமாண்ட ரதங்களில் வலம் வருவர்.

பூரி ரத யாத்திரை
பூரியில் வரும் 15ஆம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். ஜெகந்நாதர், அவரது சகோதரர் பாலபத்ர நாதர், சுபத்ரா தேவி என 3 ரதங்களையும் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

புத்தம் புது மரங்கள்
மற்ற ஊர் தேர்கள் போல் அல்லாது, பூரியில் ஆண்டுதோறும் தேர்கள் செய்யப்பட்டு ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதற்காக ஒடிஷா மாநில வனத்துறையினர் மரங்களை வழங்கி வருகின்றனர்.

உச்சக்கட்டப்பட்ட பாதுகாப்பு
ஏராளாமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ரத யாத்திரையை காண வந்துள்ளனர். ரத யாத்திரையையொட்டி பூரி நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்பு படை, அதிவிரைவுப்படை, குறிபார்த்து சுடும் கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு
பூரி கடற்கரையை கடலோர பாதுகாப்பு படை கண்காணித்து வருகிறது. கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் விரிவான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரத யாத்திரை நிகழ்ச்சி சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

அகமதாபாத்தில் ரதயாத்திரை
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ரத யாத்திரை இன்று தொடங்கியது. குஜராத் முதல்வர் திருமதி ஆனந்திபென் பட்டேல் நடத்திய சிறப்பு வழிபாட்டினைத் தொடர்ந்து, ஜமல்பூரில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் இருந்து யாத்திரைகள் புறப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுக்க, ஆடல் பாடலுடன் ரத யாத்திரை தொடங்கியது.

குஜராத் பக்தர்கள்
லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி வழிபாடு நடத்தினர். இந்த ரத யாத்திரை சுமார் 11 மணி நேரம் நீடிக்கும் என்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications