கிங்காக இருந்தவர் கிங்மேக்கரானார்... மகனை அரியணை ஏற்றுகிறார்... கௌடா வழியில் குமாரசாமி!
எதிர்பாராத நேரத்தில் பிரதமர் வாய்ப்பை தேவ கௌடாவுக்கு கிடைத்தது. அதுபோலவே அவருடைய மகனுக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Recommended Video
பெங்களூரு: கர்நாடக தேர்தலில் கிங்மேக்கராக இல்லாமல் கிங்காக இருக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி விரும்புகிறார். முதல்வர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
குமாரசாமியின் தந்தையான தேவ கௌடாவும் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான், 1996ல் இருந்தார்.
1996 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அந்தத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால், ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் இல்லை.
அந்தத் தேர்தலில் பாஜக 161 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 140ல் வென்றது. ஜனதா தளம் 46, கம்யூனிஸ்ட் கட்சிகள் 44, மற்ற மாநில கட்சிகள் 100 தொகுதிகளில் வென்றன.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
அந்த நேரத்தில் மற்றொரு தேர்தலை விரும்பாத காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முன்னணி கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முன் வந்தன. அதன்படி காங்கிரஸ் ஆதரவுடன், 14 கட்சிகள் கொண்ட ஐக்கிய முன்னணி ஆட்சி அமைக்க முடிவானது.
அப்போது பிரதமரானார் ஜனதா தளத்தில் இருந்த தேவ கௌடா. ஆனால், ஓராண்டு கூட அவர் பிரதமர் பதவியில் நீடிக்கவில்லை. யாருமே, ஏன் அவரே எதிர்பார்க்காத நேரத்தில், பிரதமரானார் தேவ கௌடா.
தற்போது கர்நாடகாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் அதிக தொகுதிகளிலும் வென்றாலும், 1996ல் நடந்ததுபோல, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு தற்போது முதல்வர் பதவி அதிர்ஷ்டவசமாக வந்துள்ளது.
எதிர்பார்க்காத நேரத்தில் கிங்கான கௌடா, தற்போது கிங்மேக்கராகி, மகனையும் கிங் ஆக்க உள்ளார். தந்தையைப் போலவே, மகனுக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்குமா என்பது மிக விரைவில் தெரிந்துவிடும்.