டெல்லியில் சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு.. என்ன பேசிருப்பாங்க?
டெல்லி: திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
கடந்த 18ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. அப்போது திமுகவினர் மீது நடைபெற்ற தாக்குதல்கள் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி குறித்தும் ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அங்கு நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்து புகார் தெரிவித்த ஸ்டாலின், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்பிக்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல் மற்றும், தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது திமுகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஸ்டாலின் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் நிலவி வரும் இன்றைய அரசியல் சூழல்குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.