பாலின அரசியல் வகுப்பு.. திரைச்சீலை மூலம் பிரிக்கப்பட்ட மாணவர்கள்.. சர்ச்சையாகும் புகைப்படம்!
திருச்சூர்: கேரளாவில் பாலின அரசியல் குறித்த கருத்தரங்கில், ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இடையே திரைச்சீலை அமைத்து தனித்தனியாக அமர வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் முஜாஹித் விஸ்டம் இஸ்லாமிய அமைப்பு சார்பாக மருத்துவ மாணவர்களுக்கு பாலின அரசியல் குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்லாமிய கண்ணோட்டத்தில் LGBTQIA+ பிரிவினரை எவ்வாறு புரிந்துகொள்வது என்று பேசப்பட்டுள்ளது. அப்போது ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இடையே திரைச்சீலை அமைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்புகள் விவரம்
ஜூலை 6ம் தேதி முஜாஹித் விஸ்டம் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய கண்ணோட்டத்தில் LGBTQIA+ என்ற கருத்தரங்கில் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். முஜாஹித் விஸ்டம் குழுமத்தின் மாணவர் பிரிவின் தலைவர்கள் மற்றும் ஃபேஸ்புக் குழு நிர்வாகிகளான அப்துல்லா மற்றும் சுஹைல் ரஷீத் ஆகியோர் வகுப்புகள் எடுத்துள்ளனர்.

கல்லூரி நிர்வாகம் விளக்கம்
இந்த கருத்தரங்கு குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போது, மாணவர் சங்கம் தரப்பில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யவில்லை என்று விளக்கமளித்துள்ளது. அதேபோல் இந்த கருத்தரங்கு இஸ்லாமிய அமைப்பால் கல்லூரி வளாகத்திற்கு வெளியே நடத்தப்பட்டுள்ளதாகவும் மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

திரையால் சர்ச்சை
பாலின அரசியலை புரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் திரைச்சீலை அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட போது, மாணவர்களுக்கு இடையே திரை அமைக்கப்பட்டது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இஸ்லாமிய அமைப்பு, உங்கள் விரக்தியை காட்டிவிட்டு செல்லுங்கள் என்று காட்டமாக பதிலளித்தோடு, திரை அமைக்கப்பட்டதற்கு நியாயம் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் அமைப்பு கண்டனம்
இந்த கருத்தரங்கு நிகழ்வுக்கு பல்வேறு முற்போக்கு மாணவர்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பேசிய எஸ்எஃப்ஐ அமைப்பினர், உயர் படிப்பை படித்த மாணவர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் திரைச்சீலை அமைக்கப்பட்டது ஏன் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பாதது ஆச்சரியமளிக்கிறது. எந்தவொரு பாலின பாகுபாடுமின்றி மக்களை நடத்துவதாக உறுதிமொழி எடுத்த மாணவர்கள், இதுபோன்ற கருத்தரங்கில் எவ்வாறு பங்கேற்றனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications