டீ விற்ற மோடி பிரதமரானதற்கு காரணம் என்ன தெரியுமா? மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
தேனீர் விற்ற மோடி பிரதமரானதற்கு காங்கிரஸ் ஜனநாயகத்தைப் பாதுகாத்ததுதான் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
Recommended Video

மும்பை: மகாராஷ்டிராவில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி வாக்காளர்களையும் கட்சியையும் கட்சி தலைமையையும் இணைக்கும் சக்தி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி எல்லா விழாக்களிலும், கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்தது என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார். மோடியைப் போன்ற ஒரு தேநீர் கடைக்காரரை பிரதமராகியுள்ளார். இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை பாதுகாத்ததுதான்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவினர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தியை குடும்ப அரசியல் என்று கடுமையாக விமர்சிக்கின்றனர். காங்கிரஸ் ஒரு குடும்பம் நாங்கள் எல்லோரும் அதன் உறுப்பினர்கள்" என்று கூறினார்.

எமர்ஜென்ஸி காலத்தைப் பற்றிய பிரதமர் மோடியின் பேச்சு குறித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் மோடி 43 ஆண்டுகளுக்கு முந்தைய எமர்ஜென்ஸி காலத்தைப் பற்றி பேசுகிறார். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் நடைமுறையில் உள்ள எமர்ஜென்ஸியைப் பற்றி பேசாதது ஏன்? விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். விவசாய திட்டங்கள் தோல்வியடைந்துள்ளது. விவசாயிகள் புதிய கடன்களைப் பெறுவது மிகவும் மந்தமாக இருக்கிறது" என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், அந்த நிகழ்வில் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "மற்றொரு பக்கம் அரசாங்கத்தின் விளம்பர செலவுகளை நிறுத்த முடியவில்லை. மோடி அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டால் மக்களின் வாழ்க்கையில் வசந்தம் வரும்" என்று குறிப்பிட்ட அவர், கட்சி தொண்டர்கள் தங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை மறந்துவிட்டு எல்லோரும் ஒன்றாக வாருங்கள், ஒன்றாக போராடுங்கள். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நிச்சயமாக நாம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications