கொரோனாவை பரப்பியதே பாஜக தான்.. இப்போது வாக்கு வேறு கேட்கிறார்கள்... பகீர் கிளப்பும் மம்தா
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதற்கு பாஜகவே காரணம் எனக் குற்றட்டாட்டியுள்ள மம்தா, அனைவருக்கும் சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் வைரஸ் பாதிப்பு அதிகரித்திருக்காது என்றும் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்டமாகத் தமிழகத்தில் 135 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து ஐந்தாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. திரணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது.
அட்டாக் மோடில் மம்தா
இந்நிலையில், பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் ஏற்பட பாஜகவே காரணம் என்று குற்றஞ்சாட்டினார். நேரடியாக அவர் பாஜக என்று கூறவில்லை என்றாலும்கூட மாநிலத்தில் வைரஸ் பரவல் அதிகரிக்க அந்நியர்களே காரணம் என்று அவர் தாக்கி பேசினார். பாஜக மண்ணின் மைந்தர்கள் இல்லை என்றும் அவர்கள் அந்நியர்கள் என்றும் மம்தா பானர்ஜி தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை பரப்பிய பாஜக
தொடர்ந்து பாஜகவை விமர்சித்துப் பேசிய அவர், இத்தனை நாட்களாக நீங்கள் எங்கு இருந்தீர்கள்? மாநில மாநிலத்திற்குள் கொரோனாவை கொண்டு வந்து விட்டு நீங்கள் சென்று விட்டீர்கள். திரினாமுல் அரசுதான் நிலைமையை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவந்தது. அப்போதே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தால் மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
தேர்தலே காரணம்
தேர்தலுக்காக என்று அவர்கள் ஏகப்பட்ட அந்நியர்களை மாநிலத்திற்கு அழைத்து வந்தனர். மாநிலத்தில் கொரோனா வைரஸை பரப்பிவிட்டு, அவர்கள் மாநிலத்தில் இருந்து வெளியேறி விட்டனர். இப்போது எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வேறு கேட்கிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டபோது இவர்கள் யாருமே இங்கு வரவில்லை. இப்போது தேர்தல் நடைபெறுவதால் மட்டுமே அவர்கள் இங்கு வந்துள்ளனர் என்று அவர் கடுமையாகத் தாக்கி பேசினார்.
பாஜக குற்றச்சாட்டு
முன்னதாக இஸ்லாமியர்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய ஒரு நாள் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையைக் கண்டித்து மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதை விமர்சித்த பாஜக மூத்த தலைவர் பேசுகையில்," மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மம்தா தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதற்குப் பதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனித்து இருக்கலாம். ஏனென்றால் அவர்தான் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.