தேசிய அரசியலுக்கு மமதா தடாலடி வியூகம்.. தமிழகம் முதல் டெல்லி வரை இன்று வீடியோகான்பரன்ஸில் உரை
கொல்கத்தா: 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தடாலடி வியூகம் வகுத்துள்ளார். மேற்கு வங்கத்தை தாண்டி தமிழகம், குஜராத், டெல்லி, உ.;பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் வாழும் மேற்கு வங்க மாநில மக்களிடையே இன்று பிற்பகல் மமதா பானர்ஜி உரையாற்றுகிறார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 3-வது முறையாக வென்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி. சட்டசபை தேர்தலின் போது பாஜக கொடுத்த அத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து அமோக வெற்றி வாகை சூடினார் மமதா.
மமதா பானர்ஜியின் தேர்தல் வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோர் இருந்தார். தற்போது பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் 2024-ம் ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தலை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. இதற்கான சந்திப்புகள், ஆலோசனைகள் தொடங்கிவிட்டன.
2024 தேர்தல்
2024 லோக்சபா தேர்தலில் தமது பங்கு பிரதானமாக இருக்க வேண்டும் என கருதுகிறார் மமதா பானர்ஜி. இதற்கான முன்னோட்டமாக தமிழகம், குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மேற்கு வங்க மாநில மக்களிடையே இன்று பிற்பகல் 2 மணியளவில் மமதா பானர்ஜி உரையாற்ற உள்ளார்.
மமதாவின் போராட்டம்
1993-ம் ஆண்டு மேற்கு வங்க இளைஞர் காங்கிரஸ் தலைவராக மமதா பானர்ஜி இருந்தார். அந்த ஆண்டு ஜூலை 21-ல் கொல்கத்தாவில் மமதா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். இந்த போராட்டம் மமதா பானர்ஜிக்கு வலிமையான இடத்தை மேற்கு வங்க அரசியலில் உருவாக்கிக் கொடுத்தது.
மமதா கடைபிடிக்கும் தியாகிகள் தினம்
1998-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் என தனிக்கட்சி தொடங்கியது முதல் ஜூலை 21-ந் தேதியை தியாகிகள் தினமாக மமதா பானர்ஜி கடைபிடித்து வருகிறார். பொதுவாக தியாகிகள் தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
பிற மாநிலங்களிலும்...
இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காலம் என்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றுகிறார் மமதா பானர்ஜி. வழக்கமாக மேற்கு வங்கத்தில் வசிக்கும் மக்களிடையேதான் மமதா பானர்ஜி உரையாற்றுவார். இந்த முறை நாட்டின் பல பகுதிகளில் வாழும் மேற்கு வங்க மாநில மக்கள் அனைவருக்கும் மத்தியில் மமதா பானர்ஜி உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.
டார்கெட் உ.பி.?
தேசிய அரசியலில் தமக்கான ஒரு இடம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான மமதாவின் முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது.. இதற்கான விரிவான ஏற்பாடுகள் நாட்டின் பல பகுதிகளில் செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் 25 இடங்களில் பிரமாண்ட ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டு மமதா பானர்ஜி உரையை ஒளிபரப்பு செய்ய உள்ளனர். குஜராத் மாநிலத்தில் 32 மாவட்டங்களில் மமதா பானர்ஜியின் உரையை ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, அஸ்ஸாம், தமிழ்நாடு, திரிபுரா மாநிலங்களிலும் மமதாவின் உரையை ஒளிபரப்ப ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மமதாவின் இந்த தடாலடி வியூகம் எதிர்க்கட்சித் தலைவர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.