லோக்சபா தேர்தலில் தனித்து போட்டி: தேர்தலுக்கு பின் நரேந்திர மோடிக்கு ஆதரவு- மமதாவின் பிளான் ‘பி’
கொல்கத்தா: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தேர்தலுக்குப் பின்னர் மோடி பிரதமராக ஆதரவு தர முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை, காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் பல மாதங்களுக்கு முன் துவக்கி விட்டன. இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தை அமாவாசை நாளான வியாழக்கிழமையன்று துவக்கினார்.
கொல்கத்தாவின், ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நடந்த, பிரமாண்ட பேரணியில் அவர் உரையாற்றினார்.
வழக்கமாக, ஜூன், 21ம் தேதி நடத்தப்படும், அக்கட்சியின், "தியாகிகள் தின விழா' நேற்று கொண்டாடப்பட்டது. அதில் பேசிய மமதா காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளை ஒரு பிடி பிடித்தார்.
போராட்டம் தொடரும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான, பா.ஜ.கவுக்கு எதிரான நம் போராட்டம் தொடரும். அது போல், ஊழலுக்கு எதிரான நம் போராட்டமும் தொடரும்.
மதகலவர அரசு தேவையில்லை
மத கலவரங்களை ஊக்குவிக்கும் அரசு, நமக்கு தேவையில்லை. காங்கிரசுக்கு, பா.ஜ.க மாற்று கட்சியல்ல. அது போல், பா.ஜ.கவுக்கும், காங்கிரஸ் மாற்றல்ல.
ஆட்சி மாற்றம்
கூட்டாட்சி முன்னணி ஏற்படுத்தப்படும். அதன் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம். நாடு முழுவதும் நானே சென்று பிரசாரம் மேற்கொள்வேன் என்றார் மம்தா.
தீதியின் பிளான் ‘எ’
மேற்குவங்காளம்,பீகார், ஒடிஷா, தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க நினைக்கிறது. எனவேதான் இப்போதே தனித்து போட்டி என்ற நிலையை எடுத்துள்ளது.
42 இடங்களில் வெல்ல முடிவு
மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலில் 42 இடங்களிலும் திரிணாமுல்காங்கிரஸ் கட்சி வெல்ல மக்கள் துணைபுரிய வேண்டும் என்று நேற்றைய பிரச்சாரத்தில் மம்தாபானர்ஜி கேட்டுக்கொண்டார்.
கிங் மேக்கராக?
42 இடங்களை மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றினால் பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் கிங் மேக்கராக உயரமுடியும் என்பது மமதாவின் திட்டம்.
காங்கிரஸ் – பாஜக
காங்கிரஸ், பாஜக அல்லாத தலைமையில் பிரதமரை தேர்வு செய்யவதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்க முடியும்.
100 இடங்களுக்குக் குறி
அதே சமயம், மேற்கு வங்காளத்தில் மட்டும் 42 எம்.பி. தொகுதிகள் உள்ளன. அசாமில் 14 தொகுதிகளும், திரிபுராவில் 2 தொகுதிகளும், ஒடிசாவில் 21 தொகுதிகளும், ஜார்க் கண்ட்டில் 14 தொகுதிகளும் உள்ளன. இந்த மாநிலங்களைச் சேர்த்து மொத்தம் 100 தொகுதிகளை கைப்பற்ற திரிணாமுல் காங்கிரஸ் குறி வைத்துள்ளது. இதன்முலம் மமதாவும் பிரதமர் கனவில் இருப்பதாக கூறப்படுகிறது.
பிளான் ‘பி’ என்ன?
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 - 230 இடங்களைக் கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. ஒருவேளை தே.ஜ.கூட்டணி வெற்றி பெற்று மோடி பிரதமராக தங்களின் ஆதரவு தேவைப் படும் பட்சத்தில் மோடியை ஆதரிக்கலாம் என்பது மமதா தீதியின் பிளான் பி என்கின்றனர்.
தனித்து போட்டி ஏன்?
ஊழல் கறையினால் காங்கிரஸ் உடன் கூட்டணி சேரதா தீதி, மேற்கு வங்கத்தில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கவர பாஜக உடன் கூட்டணி சேரவில்லை. எனவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு விட்டு வெற்றிக்குப் பின்னர் நரேந்திரமோடிக்கு ஆதரவு தர முடிவெடுத்தார் மமதா என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
மத்திய அரசு தயவு தேவை
மாநில அரசுகளுக்கு தேவையான நிதிகளை பெற மத்திய அரசின் தயவு தேவை என்பதில் மமதா பானர்ஜி தெளிவாக இருக்கிறார். எனவேதான் கடந்த இரண்டு முறையும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்த அவர் அந்நிய நேரடி முதலீடு கொள்கையில் ஏற்பட்ட பிரச்சினையினால் 2012ம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார் இந்தமுறை தேர்தலுக்குப் பின்னர் பாஜக ஆதரவு என்ற நிலையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜெ. பிரதமராக உதவுவாரா?
ஒருவேளை தமிழகத்தில் 40 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக விரும்பினால் 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ள மமதா தீதி ஆதரவு கொடுப்பாரா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.