ரூபாய் நோட்டு விவகாரம்: குடியரசு தலைவரை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி.. சிவசேனா கைகோர்ப்பு
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று சந்திக்க உள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இன்று பேரணியாக சென்று, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து குடியரசுத்தலைவரை சந்தித்துப் பேசலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆலோசனை தெரிவித்து இருந்தார். இதை தேசிய மாநாட்டுக்கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஆமோதித்தன. மற்ற கட்சிகளுக்கு இதில் உடன்பாடு இல்லை. உடனடியாக குடியரசுத்தலைவரை சந்திப்பது நல்லதல்ல. அரசு என்ன சொல்கிறது என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிடக் கூடாது என்று அக்கட்சிகள் கருத்து தெரிவித்தன.
நாடாளுமன்றத்தில் முதலில் விவாதித்து விட்டு பிறகு குடியரசுத் தலைவரை சந்திக்கலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக விவாதித்து விட்டு, பின்னர் குடியரசுத்தலைவரை சந்திப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இன்றும் எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்த உள்ளன. ஆனால் மம்தா பானர்ஜி மட்டும் தனது கட்சியினருடன் இன்று தனது கட்சியினருடன், குடியரசுத் தலைவரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். மதியம் 1.30 மணியளவில் இந்த சந்திப்பு நிகழ உள்ளது. சிவசேனா கட்சியினரும் அப்போது உடன் செல்ல உள்ளனர்.