”பாஜகவுடன் கூட்டணி இல்லை” – மம்தா பானர்ஜி திட்டவட்ட அறிவிப்பு
டெல்லி: பாரதிய ஜனதாவுடன் எந்த காலத்திலும் கூட்டணியே கிடையாது என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மாநில கட்சிகளின் ஆதரவை பெற வேண்டிய நிலை பாரதிய ஜனதாவுக்கு ஏற்படும் என்று கூறப்படுகின்றது. தேர்தலுக்கு பிறகு மம்தா பானர்ஜியின் ஆதரவை பெற பாரதிய ஜனதா முயற்சி மேற்கொள்ளலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே தேர்தலுக்கு பிறகு மோடியை ஆதரிக்க மாட்டேன் என்று மேற்கு வங்காள முதல் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. சிறுபான்மையினரின் 27 சதவீத ஓட்டுகள் அங்கே இருக்கிறது.
மோடியை ஆதரித்தால் சிறுபான்மையினர் ஓட்டுகள் பறிபோய்விடும் என்று மம்தா கருதுகிறார். இதன் காரணமாகவே அவர் மோடியுடன் கைகோர்க்க விரும்பவில்லை.
வருகிற 27ந் தேதி மற்றும் மே 4 ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி, மோடியை கடுமையாக தாக்கி பேசுவார் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என்று அந்த கட்சி தொண்டர்கள் கருதுகிறார்கள்.