ஆபத்தான ஆட்கொல்லிகள்! அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு -தீர்ப்பில் சொன்னது என்ன
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2008 ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தீர்ப்பின்போது, ‛‛ஆட்கொல்லி சிறுத்தையை பொதுவெளியில் விட்டால் ஆபத்து''என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏஆர் பட்டீல் கூறினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2008 ஜூலை 26ல் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 70 நிமிடத்துக்குள் 21 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 56 பேர் இறந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2002ல் நடந்த கோத்ரா கலவரத்துக்கு பலி வாங்கும் நடவடிக்கையாக இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டி குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

38 பேருக்கு தூக்கு
இதுகுறித்துஅகமதாபாத் போலீசார் 20 வழக்குகள் பதிவு செய்தனர். அனைத்து வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. குண்டுவெடிப்பு தொடர்பாக 77 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 13 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சிறப்பு நீதிபதி ஏ.ஆர்.பட்டீல் 28 பேரை விடுதலை செய்தார். சாட்சிகள், ஆதாரத்தின் அடிப்படையில் 49 பேரை குற்றவாளியாக அறிவித்தார். இதில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார். வரலாற்றில் ஒரு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

நீதிபதி கருத்து
இந்நிலையில் குற்றவாளிகளான 49 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார். ஆனால் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின்போது சிறப்பு நீதிபதி ஏஆர் பட்டீல் சில கருத்துகளை கூறியிருந்தார். அவர் கூறிய விபரங்கள் விபரங்கள் வருமாறு:

நம்பிக்கையின்றி...
இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் சமுதாயத்தில் அமைதியை சீர்குலைத்ததோடு, இந்தியாவில் வசித்து கொண்டு தேசத்துக்கு எதிரான செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு இந்திய அரசியலமைப்பின்படி தேர்வு செய்யப்பட்ட மத்திய அரசு, குஜராத் அரசுகள் மீது மரியாதை இல்லை. தங்களது கடவுள்களை மட்டும் நம்புவதோடு அரசு, நீதித்துறை மீது நம்பிக்கையின்றி உள்ளனர்.

ஆட்கொல்லி சிறுத்தை
இவர்களுக்கு சமுதாயத்தில் இடமளித்தால் அது மனிதர்களை கொல்லும் சிறுத்தையை பொதுவெளியில் விடுவிப்பது போலாகிவிடும். வெவ்வேறு ஜாதி, மதங்களை சேர்ந்த அப்பாவி குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்களையும் உண்ணும் ஆட்கொல்லி சிறுத்தையை போன்றவர்கள் தான் இவர்கள். இதனால் அரிதிலும் அரிதாக இந்த வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பது பொருத்தமானதாக இருக்கும். நாட்டின் அமைதி, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து மக்களுக்கு எதிரான பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை மட்டுமே தீர்வாக இருக்க முடியும்.

சதித்திட்டம்
மேலும், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக, ‛‛இவர்கள் குஜராத்தின் ஹலால் பாவகட் வனப்பகுதி, கேரளாவின் வாகமான் பகுதியில் சொந்த விருப்பத்தின் பேரில் சென்று பயிற்சி பெற்று முக்கிய குற்றவாளிகளுடன் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இவர்கள் தூக்கு தண்டனைக்கான குற்றத்தில் ஈடுபடவில்லை. இதனால் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்கு குறைத்து தண்டனை வழங்கினால் மீண்டும் குற்ற செயல்களை செய்ய பிறருடன் கைகோர்க்கலாம்'' என விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications