மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மீது வளையல் வீச்சு.. குஜராத்தில் பரபரப்பு.. இளைஞர் கைது
வந்தே மாதரம் என்று கத்திக் கொண்டே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மீது இளைஞர் ஒருவர் வளையலை வீசினார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அகமதாபாத்: மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மேல் வளையல் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அம்ரேலி நகரின் விவசாய பல்கலைக்கழக அரங்கில் பாஜக அரசின் 3 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விழாவுக்கு தலைமை ஏற்று உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த மோடா பந்தாரியா கிராமத்தைச் சேர்ந்த கஸ்வாலா எனும் இளைஞர், வந்தே மாதரம் என்று கத்தியபடியே ஸ்மிருதி இராணியை நோக்கி வளையல்களை வீசினார். மேடைக்கு வெகு தொலைவில் இருந்து வளையல் வீசப்பட்டதால், அமைச்சர் மீது வளையல் படவில்லை. இளைஞரின் இந்தச் செயலால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செயலில் ஈடுபட்ட கஸ்வாலாவை போலீசார் மடக்கிப் பிடித்து அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். அப்போது போலீசாரிடம் பேசிய அமைச்சர், இளைஞர் வளையலை வீசினாலும் அவற்றை சேகரித்து அவரது மனைவிக்கு பரிசாக அனுப்பி வைப்பேன் என்று கூறினார்.
கஸ்வாலா ஒரு விவசாயி. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்துள்ளது போல குஜராத் மாநிலத்திலும் விவசாயக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தன்னுடைய எதிர்ப்பை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசிய கூட்டத்தில் காட்டியுள்ளார்.
வளையலை வீசி விவசாயி கஸ்வாலா எதிர்ப்பை தெரிவித்துள்ளது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.