ராமர் கோவில் எங்களது நிரந்தர இலக்கு, கைவிட மாட்டோம்- ஜேட்லி
டெல்லி: ராமர் கோவில் என்பது எப்போதுமே எங்களது முக்கியத் திட்டத்தின் ஒரு பகுதி. அதை கைவிடவில்லை. அதுகுறித்து நரேந்திர மோடியின் பேச்சில் இடம் பெறுவதில்லை என்பதால் அதை நாங்கள் மறந்து விட்டோம் என்று அர்த்தம் இல்லை. நிச்சயம் ராமர் கோவில் கட்டுவோம். அதுகுறித்த பிற விவரங்கள் எங்களது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்று கூறியுள்ளார் நாடாளுமன்ற ராஜ்யசபா பாஜக தலைவர் அருண் ஜேட்லி.
இதுகுறித்து அவர் எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் மோடி குறித்தும், ஆம் ஆத்மி குறித்தும், தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், ராமர் கோவில் குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார்.
ஜேட்லியின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்...
உ.பியிலிருந்து போட்டியிடுவாரா மோடி?
கேள்வி- உங்களது வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி விட்டதா.. உ.பியிலிருந்து நரேந்திர மோடி போட்டியிடுவாரா...?
ஜேட்லி - அதுகுறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. அதைச் சொல்லும் அதிகாரத்திலும் இப்போது நான் இல்லை. ஜனவரி இறுதியில்தான் வேட்பாளர் பட்டியல் தேர்வு தொடங்கும். அறிவிப்பு வர சற்று அவகாசம் எடுக்கும். இந்த தேர்தலில் முக்கியப் பிரச்சினையே, ஆளுங்கட்சிக்கு எதிராக வீசும் அதிருப்தி அலைதான். வலிமையான இந்தியாவுக்கு தேவை தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைவர் - இதுதான் இந்த தேர்தலில் முக்கிய அம்சமாக இருக்கும். ஊழலும் ஒரு முக்கியப் பிரச்சினைதான்.
காங்கிரஸை விட எங்களது கை ஓங்கியுள்ளது
நாங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி நரேந்திர மோடியை எங்களது பிரதமர் வேட்பாளராக அறிவித்தோம். அதன் பின்னர் இந்த நான்கு மாத காலங்களில் காங்கிரஸை விட எங்களுக்கு சாதகமான சூழ்நிலையை வலுவாகவே உருவாக்கியுள்ளோம். இடையில் புதிதாக தோன்றிய ஆம் ஆத்மி கட்சியால் எங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வரப் போவதில்லை. அது ஒரு கட்சி போலவே இல்லை. அந்தக் கட்சியின் பார்வையை, எங்களது இலக்குடன் ஒப்பிட வேண்டிய தேவையும் எழவில்லை.
ஆம் ஆத்மி அதுவாகவே அழிந்து போகும்
கேள்வி - ஆம் ஆத்மி உங்களது வாக்கு வங்கியில் ஓட்டை போடாது என்று நம்புகிறீர்களா...
ஜேட்லி - ஆம் ஆத்மி சுய அழிவுப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியின் கொள்கைகள் தெளிவானதாகவே இல்லை. இது நிலைக்காது என்பது எங்களது நம்பிக்கை.
கணிப்புகளை நம்ப முடியாது
கேள்வி - ஆனால் தேசிய அளவில் ஆம் ஆத்மிக்கு 4 சதவீத வாக்குகள் இருப்பதாகவும், டெல்லியில் 48 சதவீத வாக்குகளை அது பெற்றதும், ஹரியனா, பஞ்சாபில் பெரிய அளவிலான வாக்கு சதவீதத்தை அது வைத்திருப்பதாகவும் கணிப்புகள் கூறுகிறதே...
ஜேட்லி - இந்த கருத்துக் கணிப்புகளெல்லாம் டெல்லி தேர்தல் முடிவுகள் வந்தபோது அதாவது தேனிலவின்போது எடுக்கப்பட்டதல்ல. மாறாக தேர்தல் முடிவு வந்த பிறகு அதாவது முதலிரவின்போது எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு பல வாரங்கள் ஓடி விட்டன. அது அரசியலில் மிகப் பெரிய இடைவெளியாகும். அதற்குள் மாற்றங்கள் வந்திருக்கும். எனவே இதை வைத்து ஆம் ஆத்மியை எடை போடக் கூடாது.
ராமர் கோவில் நிச்சயம் உண்டு
கேள்வி - மோடியின் பேச்சுக்களில் ராமர் கோவில் குறித்து எதுவுமே இடம் பெறுவதில்லை. ஏன் ராமர் கோவிலை இந்த முறை மறந்து விட்டீர்கள்...?
ஜேட்லி - இல்லை இல்லை, எங்களது தேர்தல் அறிக்கையில் அதுகுறித்துச் சொல்வோம். அதுவரை காத்திருக்க வேண்டும். எங்களது திட்டம் என்ன என்பது குறித்து அறிய தேர்தல் அறிக்கை வரும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம். எங்களது அடிப்படை இலக்கு ராமர் கோவில்தான். அது எப்போதுமே எங்களது நிரந்தர இலக்காகும். தேர்தல் அறிக்கை மற்றவற்றை சொல்லும்.
சல்மானை வைத்து முஸ்லீம்களைக் கவரத் திட்டமா...
கேள்வி - சல்மான் கானுடன் இணைந்து முஸ்லீம் ஓட்டுக்களைக் கவர மோடி முயற்சிக்கிறாரா...?
ஜேட்லி - மக்கள் மதம் சார்ந்து வாக்களிப்பார்கள், மதச்சார்போடு வாக்களிப்பார்கள் என்று நினைப்போர் இந்த முறை பெரும் ஏமாற்றத்தையே சந்திக்கப் போகிறார்கள். காரணம், எங்களது திட்டமே அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கியதாக இருக்கும். சாதி, மதச்சார்பற்ற திட்டங்களோடு நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம், சந்திக்கப் போகிறோம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்புடன் வாழ வேண்டும், சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது எண்ணம் என்றார் ஜேட்லி