மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் விருது.. ஒரு "இன்சைட்" கதை!
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜப்பானின் ஷின்ஷோ அபே தலைமையிலான ஜப்பான் அரசு சர்ப்பிரைஸ் விருது கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிதி சென்ட்ரல் இணையத்தளம் கூறியிருப்பதாவது:
மோடியுடன் மிக நெருக்கமானவராக இருந்து வரும் ஜப்பான் பிரதமர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விருது அளித்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் நாட்டின் உயரிய குடிமக்கள் விருதான "The Grand Cordon of the Order of the Paulownia Flowers"விருது அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா - ஜப்பான் நல்லுறவு மேம்பட பாடுபட்டதற்காக இந்த விருது மன்மோகன் சிங்குக்கு தரப்படுவதாக ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த விருதை 57 வெளிநாட்டினர் பெற்றுள்ளனர். அதில் மன்மோகன் சிங்கும் ஒருவராக இணைந்துள்ளார்.
இந்த விருது குறித்து மன்மோகன் சிங் கூறுகையில், ஜப்பான் அரசு மற்றும் மக்கள் என் மீது காட்டியுள்ள அன்பு என்னை நெகிழ வைத்துள்ளது.
ஆசியாவை உயர்த்துவதில் இந்தியாவும், ஜப்பானும் இணைந்தே செயல்பட்டு வந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளும் சிறந்த உறவைப் பேணி வந்துள்ளன.
இரு நாட்டு மக்களும் இணைந்து மேற்கொண்டுள்ள கூட்டு முயிற்சிகளும் நடவடிக்கைகளும் இரு நாட்டு உறவையும் எதிர்காலத்தில் சிறந்த உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை என்று சிங் கூறியுள்ளார்.
ஆனால் மன்மோகன் சிங்குக்கு இந்த விருதை ஜப்பான் அளிக்க வேறு சில காரணங்களும் உள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
உண்மையில் இந்த விருது மன்மோகன் சிங்குக்குக் கிடைக்க பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என்கிறார்கள். நரேந்திர மோடி சமீபத்தில் ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்திருந்தார். அப்போது ஜப்பான் பிரதமர், இந்த விருது குறித்து மோடியுடன் விவாதித்தாரம்.
அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்த விருதைத் தரலாம். அதற்கு சிங் பொருத்தமானவர் என்று மோடி பரிந்துரைத்தாராம்.
அதேசமயம், இந்த விருதை மன்மோகன் சிங் ஏற்பாரா என்ற தயக்கமும் இருந்துள்ளது. இதையடுத்து மன்மோகன் சிங்கின் மனதை அறியும் வேலையை மூத்த அதிகாரி ஒருவரிடம் மோடி கொடுத்துள்ளார். அவரும் மன்மோகன் சிங்கிடம் இந்த விருது குறித்துப் பேசி அவர் பாசிட்டிவான மனநிலையில் இருப்பதாக தெரிவித்தாராம். இதையடுத்தே ஜப்பான் நிர்வாகம், மன்மோகன் சிங்குக்கு இந்த விருதை அறிவித்துள்ளதாம்.
ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் சார்பானவர்களுக்கு இதுபோன்ற பாராட்டும், கெளரவமும் கிடைத்தால் அது மோடி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் சிலர் மோடி தரப்பை எச்சரித்துள்ளனர். இருப்பினும் மோடி தனது நிலையில் உறுதியாக இருந்துள்ளதாக கூறுகிறார்கள்.