ஒடிஷாவில் நாளை வாக்குப் பதிவு- தேர்தலை புறக்கணிக்க மாவோயிஸ்டுகள் அழைப்பு!
ராயகடா: ஒடிஷா மாநிலத்தில் நாளை நடைபெறும் வாக்குப் பதிவை புறக்கணித்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
லோக்சபா தேர்தலின் 3வது கட்டமாக நாளை நாடு முழுவதும் 91 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் ஒடிஷா மாநில தொகுதிகளும் அடங்கும்.
இந்நிலையில் ஒடிஷாவில் லோக்சபா தேர்தலை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஊடகங்களுக்கு நேற்று மாவோயிஸ்டுகள் நேற்று அனுப்பி வைத்த "ஆடியோ" செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹலகாண்டி, ராயகடா, கந்தமால், கஜபதி மாவட்டங்களில் முழு அடைப்புக்கும் மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் தேர்தல் புறக்கணிப்பு, முழு அடைப்பை வலியுறுத்தி பல இடங்களில் போஸ்டர்களையும் மாவோயிஸ்டுகள் ஒட்டி வைத்துள்ளனர்.
இதனால் நாளை வாக்குப் பதிவின் போது மாவோயிஸ்டுகள் வாக்குச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. அப்படி எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.