தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் மோடி, அத்வானி, சோனியா உள்ளிட்ட புதிய எம்.பிக்கள் பதவியேற்பு!!
டெல்லி: 16-வது லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நரேந்திரமோடி, அத்வானி, சோனியாகாந்தி உள்ளிட்ட அனைவரும் இன்று தற்காலிக சபாநாயகர் கமல்நாத் முன்னிலையில் பதவியேற்றனர்..
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 46 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சரவை கடந்தவாரம் பதவியேற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று 16-வது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் தொடங்கியது. இது குறுகிய கால கூட்டத்தொடர் ஆகும். 16-வது லோக்சபா உறுப்பினர்கள் இன்று பதவியேற்க உள்ளதால், முன்னதாக தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் மூத்த எம்.பி கமல்நாத் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சாலை விபத்தில் பலியான மத்திய அமைச்சர் முண்டேவுக்கு இரங்கல் தெரிவித்து நேற்றைய முதல்நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
2வது நாள் கூட்டம்
அதனைத் தொடர்ந்து இன்று துவங்கிய இரண்டாம் நாள் கூட்டத் தொடரில் 16வது லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தற்காலிக சபாநாயகர் கமல்நாத் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
மோடி, அத்வானி பதவியேற்பு
முதலில் நரேந்திரமோடி எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். கடவுளின் பெயரால் அவர் பதவி பிரமாணம் செய்தார். இதைத்தொடர்ந்து அத்வானியும்,
3வதாக சோனியா
அவரை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் எம்.பியாக பதவி பிரமாணம் செய்தனர்.
மோடிக்கு வாழ்த்து
முன்னதாக எம்.பியாக பதவி பிரமாணம் செய்த மோடிக்கு, அருகே சென்று சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்தார்.
சமஸ்கிருதத்தில் சுஷ்மா, உமாபாரதி
இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் வரிசையாக பதவி பிரமாணம் எடுத்தனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ், கங்கை பராமரிப்பு துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோர் சமஸ்கிருதத்தில் பதவியேற்றனர்.
கன்னடத்தில் சதானந்த, அனந்தகுமார்
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா, ரசாயனத்துறை அமைச்சர் அனந்தகுமார் ஆகியோர் கன்னடத்தில் பதவி பிரமாணம் செய்தனர்.
தாய்மொழியில்..
மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ஆங்கிலத்தில் பதவி பிரமாணம் செய்தார். பல்வேறு எம்.பிக்களும் தங்களது தாய்மொழிகளிலேயே பதவி பிரமாணம் செய்தனர்.
தமிழில் பொன்.ராதா
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
நாளைபுதிய சபாநாயகர் தேர்தல்
இதற்கிடையே ஏற்கனவே திட்டமிட்டபடி, நாளை புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. புதிய சபாநாயகராக பாஜக மூத்த எம்.பி. சுமித்ரா மகாஜன் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.